வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ashok
Last Updated : சனி, 14 நவம்பர் 2015 (18:50 IST)

மழையால் உயிரிழந்த மேலும் 6 பேரின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய்: ஜெயலலிதா அறிவிப்பு

தமிழகத்தில் பெய்து வரும் வட கிழக்கு பருவ மழையால் பல்வேறு மாவட்டத்தில் உயிரிழந்த மேலும் 6பேரின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.


 


 
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "தமிழகத்தில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழையின் காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டம், கெம்பகரை கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் என்பவரின் மகன் கோட்டீஸ்வரன், விழுப்புரம் மாவட்டம், குச்சிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை என்பவரின் மகன் கருணாமூர்த்தி,திருநெல்வேலி மாவட்டம், குற்றாலம் அருகே மதுரை தெற்கு, கான்பாளையத்தைச் சேர்ந்த ராஜகோபாலன் என்பவரின் மகன் ஆத்மா ராவ்; ஆகியோர் வெள்ளப்பெருக்கின் காரணமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
 
காஞ்சிபுரம் மாவட்டம், ஐயம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த சிவா என்பவரின் மகள் மெளலிஸ்ரீ மழையின் காரணமாக மின்கசிவு ஏற்பட்டு மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தாள்.
 
வேலூர் மாவட்டம், துர்க்கம் கிராமத்தைச் சேர்ந்த மார்கண்டன் என்பவரின் மகன் முனுசாமி;
 
காஞ்சிபுரம் மாவட்டம், நத்தப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த ஏகாம்பரம் என்பவரின் மகன் சின்னபையன்;
 
ஆகியோர் மழையின் காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.
 
தமிழகத்தில் பெய்து வரும் கன மழையின் காரணமாக பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த மேலும் 6 நபர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
இந்தத் துயர சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா நான்கு லட்சம் ரூபாய் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.