வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.vadivel
Last Updated : செவ்வாய், 13 அக்டோபர் 2015 (04:24 IST)

பருப்பு விலையை கொஞ்சம் குறையுங்க, உங்களுக்கு புண்ணியமாகப் போகும்: வைகோ கெஞ்சல்

அன்றாட உணவுப் பொருட்களில் ஒன்றாகிவிட்ட பருப்பு விலையை உடனே குறைக்க, மத்திய - மாநில அரசுகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதிமுக கோரிக்கை விடுத்துள்ளது.
 

 
இது குறித்து, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: -
 
தமிழக மக்கள், தங்களது உணவுப் பட்டியலில் சாம்பார் என்பதையே மறந்து பல வாரங்கள் ஆகிவிட்டது. மத்தியில் பாஜக தலைமையிலான நரேந்திர மோடி அரசு பதவி ஏற்ற பின்பு, இணையதள வர்த்தகப் பட்டியலில் துவரம் பருப்பு போன்ற பருப்பு வகைகளையும் சேர்த்ததால்தான் இந்த விலையேற்றம் உருவானது.  ஆன் லைன் வியாபாரம் மூலம், சந்தையில் செயற்கையாக தட்டுப்பாட்டை உருவாக்கி, துவரம் பருப்பு பதுக்கியதும், விலை உயர்வுக்கு முக்கிய  காரணமாகும்.
 
துவரம் பருப்பு உற்பத்தி ஆகும் மராட்டியம், கர்நாடகம், ஆந்திரா, மத்தியப்பிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்களில் போதிய மழையின்றி விளைச்சல் குறைந்து போனது. இதனால், தமிழ்நாட்டுக்கு பருப்பு வரத்துக் குறைந்தது.
 
விலைவாசியைக் குறைப்போம் என்று கூறி, கடந்த 2011 ஆம் ஆண்டு  வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, நான்கரை ஆண்டுகளில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த என்ன செய்தார் ?
 

ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பேற்ற 2011 அக்டோபரில் துவரம் பருப்பு விலை கிலோ ரூ. 52 தற்போது ரூ.180 ஆக உயர்ந்துள்ளது. பாசிப் பருப்பு ரூ. 64 இல் இருந்து ரூ.130  ஆக உயர்ந்துள்ளது. கடலைப் பருப்பு ரூ.52 இல் இருந்து ரூ.85  ஆக உயர்ந்துள்ளது. உளுந்தம் பருப்பு ரூ.78 இல் இருந்து ரூ.150  ஆக உயர்ந்துள்ளது. மிளகாய் ரூ.110 இல் இருந்து ரூ.140 ஆக உயர்ந்துள்ளது.  மிளகு ரூ.40 இல் இருந்து ரூ.1000 ஆக  உயர்ந்துள்ளது. சீரகம் ரூ.180 இல் இருந்து ரூ.200  ஆக உயர்ந்துள்ளது. மல்லி ரூ.64 இல் இருந்து ரூ.160  ஆக உயர்ந்துள்ளது. கடுகு ரூ.45 இல் இருந்து ரூ.300 ஆக உயர்ந்துள்ளது.  தேங்காய் எண்ணெய் ரூ.100 இல் இருந்து ரூ.220 ஆக உயர்ந்துள்ளது. நல்லெண்ணெய் ரூ.91 இல் இருந்து ரூ.220 ஆக  ஆக உயர்ந்துள்ளது.
 
மளிகைப் பொருட்களை குறைந்த விலையில் விற்பனை செய்ய அம்மா மளிகைத் திட்டம் என்ற பெயரில் செயல்படுத்துவதாக மக்களை ஏமாற்றும் ஜெயலலிதா அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
 
தீபாவளி பண்டிகை நெருங்கும் இந்த தருணத்தில், பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்கள் விலை உயர்வு மக்களை பெரும் கவலை அடையச் செய்துள்ளது.
 
எனவே, தாறுமாறாக ஏறும் விலைவாசி உயர்வை மத்திய - மாநில அரசு இணைந்து தடுக்க வேண்டும் என்றும், பருப்பு வகைகளை ஆன் லைன் வணிகத்தில் இருந்து நீக்க வேண்டும் என்றும், ஆன் லைன் வர்த்தக சூதாட்டத்தை முற்றிலும் தடை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.