1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : செவ்வாய், 19 ஜூலை 2016 (12:27 IST)

சுவாதிக்கு பெங்களூரில் பதிவு திருமணம் நடந்ததா? : ராம்குமார் வழக்கறிஞர் பரபரப்பு தகவல்

சுவாதிக்கும், பெங்களூரில் வசிக்கும் ஒரு வாலிபருக்கும் பதிவு திருமணம் நடந்துள்ளது என்று ராம்குமாரின் வழக்கறிஞர் ராமராஜ், பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.


 



 
சுவாதி கொலை தொடர்பாக, ராம்குமார் என்ற வாலிபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். போலீசாரின் விசாரணையில், சுவாதியை கொலை செய்ததை ராம்குமார் ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியானது.
 
இது ஒரு பக்கம் என்றாலும், ராம்குமார் அந்த கொலை செய்யவில்லை. அவர் அதில் பலிகடா ஆக்கப்பட்டுள்ளார் என்று அவரது வழக்கறிஞர் ராமராஜ் தொடர்ந்து கூறி வருகிறார். மேலும், ராம்குமார்தான் குற்றவாளி என்று கமிஷனரே கூறிய பிறகு, எதற்காக போலீசார் விசாரணை மற்றும் சிறையில் அணிவகுப்பு நடத்துகிறார்கள் என்று அவர் கேள்வி எழுப்பி வருகிறார்.
 
இதுபற்றி கருத்து தெரிவித்த தொல்.திருமாவளவன், சுவாதிக்குக்கும் அவரது நண்பர் என்று கருதப்பட்ட பிலால் மாலிக்கிற்கும் இடையே காதல் இருந்ததாகவும், சுவாதி மதம் மாறுவதற்கு தயாராக இருந்ததால், அவர் ஆணவ கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் பரபரப்பு கிளப்பினார்.
 
ஆனால், சுவாதியை நேசித்த முஸ்லீம் நண்பர், இந்து மதத்திற்கு மாற தயாராக இருந்ததால், இந்த கொலை நடந்திருக்கலாம் என நாங்கள் சந்தேகிக்கிறோம். அதை மறைப்பதற்காக, திருமாவளவன் இப்படி கூறுகிறார் என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா குண்டு வீசினார். 
 
இந்நிலையில், சுவாதிக்கும், பெங்களூரை சேர்ந்த ஒரு வாலிபருக்கும், ஏற்கனவே பதிவு திருமணம் நடந்து முடிந்துவிட்டது. அதனால்தான் சுவாதியை அவரது குடும்பத்தினர் சென்னைக்கு அழைத்து வந்து விட்டனர் என்று ராம்குமாரின் வழக்கறிஞர் ராமராஜ் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.
 
ஏற்கனவே, சுவாதி கொலை செய்யப்படுவதற்கு சில நாட்களுக்கு முன், பெங்களூரை சேர்ந்த ஒரு வாலிபர், அவரை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து கன்னத்தில் அடித்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில், வழக்கறிஞர் இப்படி ஒரு தகவலை கூறியுள்ளார்.
 
ஆனால் அதுபற்றியும், அவரின் பதிவு திருமணம் பற்றியும் போலீசார் ஏன் விசாரணை மேற்கொள்ளவில்லை என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். பதிவு திருமணம் என்றால், கண்டிப்பாக சிலர் சாட்சி கையெழுத்து போட்டிருக்க வேண்டும். எனவே, சுவாதி பெங்களூரில் பணிபுரிந்த அலுவலகத்தில் உள்ள அவரின் நண்பர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினால் உண்மை தெரியவரும் என்று அவர் கூறியுள்ளார்.
 
அவர்களிடம், போலீசார் விசாரணை நடத்தினால், பெங்களூரில் பணிபுரிந்த போது, சுவாதி ஏதேனும் பிரச்சனையில் சிக்கியிருந்தாரா என்பது தெரியவரும் என்று ராமராஜ் தரப்பு எதிர்பார்ப்பதாக தெரிகிறது.