வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 16 ஏப்ரல் 2019 (13:39 IST)

ஸ்ரீ ரெட்டிக்கு பதில் சொல்லுங்கள் லாரன்ஸ் - சீமானுக்கு ஆதரவாக களமிறங்கிய சுரேஷ் காமாட்சி

நடிகர் லாரன்ஸ் சீமானுக்கு எதிராக விடுத்த அறிக்கைக்குப் பதில் அளிக்கும் விதமாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார்.

நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் தன்னையும் தான் செய்யும் சமூக சேவைகளையும் அவமதித்து சமூக வலைதளங்களில் அவதூறு செய்வதாகவும் அவர்களை சீமான் அடக்கி வைக்க வேண்டும் என்றும் இல்லையெனில் மோதிப்பார்க்க தான் தயார் என்றும் நடிகர் லாரன்ஸ் சில நாட்களுக்கு முன்னர் ஒரு அறிக்கையை வெளியிட்டு பரபரப்புக் கிளப்பினார்.

இது குறித்து சீமானிடம் கேள்வி எழுப்பியபோது அவர் ‘ தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தம்பி லாரன்ஸிடம் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்’ எனத் தெரிவித்தார். இதையடுத்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சீமானுக்கு ஆதரவாக ஒரு அறிக்கையை வெளியிட்டு மீண்டும் பிரச்சனையைத் துவக்கி இருக்கிறார். அவரது அறிக்கை பின்வருமாறு:-

நண்பர், நடன இயக்குநர், இயக்குநர், நடிகர் திரு. ராகவா லாரன்ஸ் அவர்களுக்கு, முகவரியற்ற ஒரு கடிதத்தை நேற்று சூசகமாக எடுத்தாள விடுகிறேன் பேர்வழி எனக் கருதிக்கொண்டு பளிச்சென்றே பரப்பி விட்டிருந்தீர்கள். நல்லது. இதற்கு நீங்கள் பெயர் போட்டு, முகவரியிட்டு நேரடியாகவே செய்தியாக்கியிருக்கலாம்.அதனால் அண்ணன் சீமானுக்கு எந்த பாதிப்பும் வந்துவிடப்போவதில்லை. கருத்தியல் ரீதியான பல எதிர்மறைக் கேள்விகளை தன் பொதுவாழ்வில் சந்தித்தும்... பதிலளித்துமே வருகிறார். ஓடி ஒளிந்ததில்லை.

இந்தக் கடிதம் அவர் பதில் சொல்லுமளவிற்கு தகுதியில்லாததாலும், ஏதோ ரெண்டாங் கிளாஸ் பிள்ளை, மிஸ் இவன் என்னை கிள்ளி வச்சிட்டான் மிஸ்ஸுன்னு சொல்ற அளவு அமெச்சூராக இருந்ததாலும், அண்ணனுக்கு பதிலாக அவரின் எண்ணற்ற தம்பிகளுள் ஒருவனான சுரேஷ் காமாட்சி என்கிற நானே இதற்கு பதில் சொன்னால் போதும் என்று நினைக்கிறேன்.அதுசரி, எச்சரிக்கையும் சவாலும் விடுமளவிற்கு என்னதான் நடந்தது? அப்படி எங்குதான் உங்களிடம் சீமானின் தம்பிகள் மோதினார்கள்? ஒன்றும் புரியவில்லை. நான் பத்திரிகை, தொலைக்காட்சி, முகநூல், ட்விட்டர், வலைதளங்கள், எல்லாவற்றிலும் வரக்கூடிய செய்திகளில் அப்டேட்டாக இருப்பவன். எனக்கே தெரியவில்லை நீங்கள் சொல்லியுள்ள எந்த சம்பவமும், சீமானின் தம்பிகள் எங்கு சீண்டினார்கள் என்றும்.

மொட்டத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சி போட்டது மாதிரி ஒரு கடிதம்.. அதில் என்ன புரிந்து கொண்டு யாரைக் கண்டிப்பது? முதலில் உங்களை சீண்டுமளவிற்கு எங்கள் தம்பிகளுக்கும் அண்ணன்களுக்கும் வேலை இல்லாமலில்லை. எங்கள் நோக்கம் போராட்டம் எல்லாம் வேறு இலக்கைத் தொட்டு நிற்பவை.தமிழ்த் தேசிய நோக்கோடு ஓடும் அண்ணன் பிரபாகரனின் பிள்ளைகளுக்கு தமிழ்த் தேசிய இலக்கும், தமிழ் மக்களின் உரிமைகளுக்கான போராட்டமும். சுரண்டப்பட்ட இயற்கை வளங்களை மீட்டெடுக்கும் பெரும்பணிகளில் ஈடுபடவே நேரம் போதுமானதாக இருக்கிறது.இதில் உங்களைப் பற்றி நினைக்க எங்கே நேரம் இருக்கிறது? உங்களை எதிர்த்து அரசியல் செய்ய நீங்கள் ஏதேனும் அரசியல் அங்கம் வகிப்பவரா என்ன? ஏதோ சும்மா மெரினா பீச்சில் டீ வாங்கிக் கொடுத்துவிட்டு அடி விழப்போகுது எனத் தெரிந்ததும் ஓடி ஒளிந்துகொள்ளும் போலிப் புரட்சி செய்ய எம் பிள்ளைகளுக்கு தெரியாது.

வீர வழி வந்த எம்பிள்ளைகளில் எத்தனை பேர் சமூக அவலங்களை எதிர்த்து சிறைபட்டு அடிபட்டு மிதிபட்டு போராடிக்கொண்டிருக்கிறார்கள் தெரியுமா? அது தெரிந்தால் ஏன் வாருங்கள் ஒரேமேடையில் நீங்கள் செய்த நல்லதும் நான் செய்த நல்லதையும் பேசுவோம் என என் அண்ணனிடம் சவால் விடப் போகிறீர்கள்?நீங்கள் நல்லது செய்வதைப் போல நாங்களும் செய்கிறோம். ஆனால் மீடியாவுக்கு அதை ஒவ்வொரு முறையும் அனுப்பிக் கொண்டிருப்பதில்லை. உங்களைச் சொல்லியும் குற்றமில்லை. நாம்தமிழர் செய்தி என்றாலே பாதி மீடியாவினருக்கு கசப்பு... அப்புறம் எப்படி உங்களுக்குத் தெரிந்திருக்கும்?
ஆனால் யாரையும் முன்னிறுத்தி காசு வாங்கி பிழைப்பு நடத்துவதில்லை. நாங்களும் நல்லது செய்கிறோம். அப்படி செய்வதைப் பற்றி தம்பட்டம் அடிக்காமல் இருப்பதே மேல் என நகர்கிறோம். உங்களைப் பற்றி எழுதியது யார்? திட்டியது யார்? உங்க கூட மோதவா நாங்க வேலை செய்றோம்? நாங்க என்ன வேலை செய்கிறோம்? நீங்க என்ன வேலை செய்றீங்க? உங்களோட மோத என்ன அவசியம் எங்களுக்கு?உங்களுக்கும் எங்களுக்கும் என்ன சம்பந்தம்?சம்பந்தமில்லாமல் ஏன் இந்த விவகாரத்தை பேசணும்? யார் தூண்டிவிட்டு இந்த அறிக்கை? யாரிடம் அடிமை வேலை செய்துகொண்டு எங்கள் கட்டுப்பாடான கூட்டுக்குள் கல்லெறிந்து பார்க்கும் ஈன வேலையைச் செய்கிறீர்கள் என்பது எம்மக்களுக்கு நன்றாகவே தெரியும்.

அதற்கு வேறு நல்ல காரணத்தை தேடிப்பிடித்திருக்கலாம். வலுவான வேறு யாரையாவது அவர்கள் அனுப்பியிருக்கலாம்.. பேய்ப் படத்தில் கூட இடுப்பிலேறி உட்கார்ந்துகொண்டு காமெடி செய்கிற உங்களைப் போய் இறக்கியிருக்காங்க பாருங்க... சிரிக்கிறதா? அழுறதான்னு தெரியலை. அப்புறம், இந்த சவால் விடுறது மோதிப்பார்க்கிறதுன்னு வந்துட்டா, தம்பிக, பிள்ளைகளை காட்டி பணம் பண்ணுகிற இடம், நீங்க எதுல வீக்குன்னும் எல்லோருக்கும் தெரியும். அங்கே எல்லாம் மூக்கை நுழைச்சி ஆதாரத்தை எடுத்துட்டு வந்து அசிங்கப்படுத்திடுவாங்க தேவையா?

நாம உண்டு நம்ம வேலையுண்டு படத்தை ரிலீஸ் பண்ணிட்டு போலாமே, படம் ரிலீஸ் ஆகும்போதெல்லாம் பப்ளிசிட்டிக்கு உங்களுக்கு யாராவது வேணுமா என்ன?சவால் விடணும், மோதிப் பார்க்கணும்னா நீங்க சவால் விட வேண்டியது ஸ்ரீரெட்டிகிட்டதான். அவங்க சொன்ன குற்றச்சாட்டுக்கு முதல்ல பதில் சொல்லுங்க. அவங்க கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க லாரன்ஸ். அதை விட்டுட்டு இங்கே வந்து ஏன் முட்டணும்? அவங்க சொன்ன குற்றச்சாட்டை வாய்ப்பு கொடுத்து வாயடைச்ச நீங்களெல்லாம் என்ன பேச முடியும்?

எதையும் ஆராய்ந்தறிந்து பேசுகிற பிள்ளைகள் உங்களை என்ன தவறாகப் பேசினார்கள் என்பதை சீமான் அண்ணனுக்கு போனில் அழைத்து சொல்லியிருக்கலாம். அவரை நீங்கள் அழைத்திருந்தால் நேரடியாகக்கூட வந்திருப்பார். என் அண்ணன் தன்னை வந்து பாருங்கள் என்றுகூட சொல்லமாட்டார். நானே வருகிறேன் என்று பண்பு காட்டும் சிறந்தவன்.தம்பிகளை பண்பாளர்களாகவே வளர்க்கவும் நினைக்கிறார். முனைகிறார். தவிர சீமான் தம்பிகள் என போலி முகங்களோடு சிண்டு முடிக்கும் பிற கட்சிக்காரர்களும் உண்டு என்பதை நினைவில் கொண்டு எங்கள் உயரிய பணியினை இடையூறு செய்யாமல் விலகி நிற்கும்படி கேட்டுக்கொள்கிறேன். எங்களைப் போன்ற களத்தில் நிற்கும் பிள்ளைகளை சீண்டுவது தேவையற்றது.

மற்றபடி உங்கள் படத்திற்கு பப்ளிசிட்டி தேவைப்பட்டால் சொல்லுங்கள். அண்ணனிடம் சொல்லி ஒரு வீடியோ விளம்பரம் வாங்கித் தருகிறேன். காசு பாருங்கள் அல்லது உங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்காக பிரச்சாரம் செய்யுங்கள். ஜல்லிக்கட்டு, சமூகசேவை என நாடகம் போட்டு நல்லவன் என வெளிக்காட்டிக் கொள்ளுங்கள், வேண்டாமெனவில்லை. அது எங்களுக்கு அவசியமே இல்லை. நீங்கள் எங்கள் இலக்கல்ல. நாங்கள் மோடி, ராகுல் காந்தி என மோதிக்கொண்டிருக்கிறோம். உங்களை எங்கள் எதிரிப்பட்டியலின் இறுதியில்கூட வைக்கவில்லை. ஆனால், அதற்காக தேன் கூட்டில் கைவைக்காதீர்கள்.