வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : செவ்வாய், 12 ஜனவரி 2016 (13:43 IST)

ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை - உச்சநீதிமன்றம் அதிரடி

ஜல்லிக்கட்டு மற்றும் ரேக்ளா பந்தைய விளையாட்டுகளுக்கு எதிரான மனு மீதான விசாரணையில் உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

 

 

காளை மாடுகளை கொண்டு நடத்தப்படும் ஜல்லிக்கட்டு மற்றும் ரேக்ளா பந்தைய விளையாட்டுகளுக்கு கடந்த 8ஆம் தேதி மத்திய அரசு அனுமதி அளித்தது.
 
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் இந்திய விலங்குகள் நல வாரியம், தற்போது தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை நடத்த இந்திய உச்சநீதிமன்றம் நேற்று [திங்கள்கிழமை] ஏற்றுக்கொண்டது.
 
இந்திய உச்சநீதிமன்ற நீதிபதி டி.எஸ்.தாக்கூர் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜல்லிக்கட்டு ரத்தவெறி கொண்ட ஒரு விளையாட்டு, எனவே அதை தடை செய்ய வேண்டும் எனும் கோரிக்கையை இந்திய விலங்குகள் நல வாரியம் வைத்தது.
 
இந்திய விலங்குகள் நல வாரியம் தவிர இதே மாதிரியான மனுக்களை, இந்திய விலங்குகள் பாதுகாப்பு அமைப்பின் கூட்டமைப்பு, விலங்குகள் நீதிநெறிக்குரிய மக்கள் அமைப்பு போன்ற பொதுநல அமைப்புகள் மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள் உள்ளிட்டோரும் இந்த வழக்கில் மனுதாரராக இணைந்திருந்தனர்.

ஜல்லிக்கட்டுப் போட்டிகளின் ஒருங்கிணைப்பாளர்கள்  ஜல்லிக்கட்டு நடத்த தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. மத்திய அரசு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் அனைத்தும் முறைப்படியாக பின்பற்றப்படும் என்று தெரிவித்தனர்.
 
இதற்கிடையே, இந்த அமர்வில் உள்ள நீதிபதி பானுமதி, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதியாக பணியாற்றிய காலத்தில் ஒரு வழக்கில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து தீர்ப்பளித்திருக்கிறார். எனவே, இந்த வழக்கு விசாரணையில் இருந்து அவர் தன்னை விடுவித்துக் கொள்வதாக அறிவித்தார். இதனையடுத்து வழக்கு விசாரணை வேறு அமர்வுக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில், தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் 4 வாரத்தில் பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.