செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வெள்ளி, 28 நவம்பர் 2014 (13:10 IST)

கொதிக்கும் எண்ணெயை மனைவி மீது தாய் ஊற்றியதால், தற்கொலை செய்து கொண்ட கணவன்

குடும்பப் பிரச்சனைக் காரணமாக கொதிக்கும் எண்ணெயை மனைவி மீது தாய் ஊற்றியதால் கணவன் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
 
சென்னை தியாகராய நகர் மேட்லி ரோட்டில் சாகுல் அமீது என்பவர் வசித்து வந்துள்ளார். எம்.பி.ஏ. பட்டதாரியான இவர், கால் டாக்சி டிரைவராகப் பணி புரிந்து வந்துள்ளார். இதற்கிடையில், கடந்த மார்ச் 23ஆம் தேதி இவருக்கும் ஷாகின் என்பவருக்கும்  திருமணம் நடைபெற்றது.
 
திருமணமான சில நாட்களிலேயே கணவன், மனைவி இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனையில் சாகுல் அமீதுவின் தாயார் நிஷா தலையிட்டுள்ளார். கணவன், மனைவி பிரச்னையில் தாயார் தலையிடுவது, மனைவிக்கு பிடிக்கவில்லை. ஆனால் சாகுல் அமீது தாயாருக்கு ஆதரவாகவேப் பேசியுள்ளார். 
 
இந்நிலையில், சாகுலின் தாயாரும், மனைவியும் வீட்டில் தனியாக இருந்துள்ளனர். அப்போது, அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், கடும் ஆத்திரமடைந்த ஹாஜி நிஷா அடுப்பில் கொதித்துக் கொண்டு இருந்த எண்ணெயை எடுத்து மருமகள் ஷாகின் மீது எடுத்து ஊற்றியுள்ளார்.
 
இதனால் அவர் தாங்க முடியாத வலியினால் அலறித் துடித்துள்ளார். இது குறித்து அக்கம் பக்கத்தினர் மாம்பலம் காவல் துறையினருக்கு உடனடியாகத் தகவல் தெரிவித்துள்ளனர். உடனே அவர்கள், ஷாகினை சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிருக்கு ஆபத்தான நிலையில், ஷாகின் சிகிச்சை பெற்று வருகிறார். இதைத் தொடர்ந்து சாகுல் அமீதுவின் தாயார் ஹாஜி நிஷா மீது போலீசார், கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
 
இந்த சோகத்தில் சாகுல் அமீது சைதாப்பேட்டை அருகே, ரயில் தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்துள்ளார். அப்போது, அவ்வழியாக வந்த மின்சார ரயில் சாகுல் அமீது மீதி ஏறிச் சென்றதில் சாகுல் அமீது பரிதாபமாக உயிரிழந்தார்.