வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By கே.என்.வடிவேல்
Last Modified: புதன், 20 மே 2015 (13:34 IST)

மாப்பிள்ளை முன்னிலையில், மணப்பெண்ணுக்கு தாலி கட்ட முயன்ற சுப்பிரமணியன் சாமி

நெல்லையில், திருமண விழா ஒன்றில் கலந்து கொண்ட பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, மணமகனுக்கு தாலி எடுத்து கொடுப்பதற்கு பதில், மணமகளுக்கு அவரே தாலி கட்ட முயன்ற சம்பம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

 
திருநெல்வேலியில், தூத்துக்குடி செல்லும் சாலையில்,கே.டி.சி நகரில் உள்ள மாதா மாளிகை திருமண மண்டபத்தில், நெல்லையைச் சேர்ந்த பிரபல பேருந்து உரிமையாளர் மகன் பாலசண்முகத்திற்கும், சிவஞானசெல்வி என்ற பெண்ணுக்கும் திருமணம் இன்று காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் திருமணம் நடைபெற இருந்தது.
 
இந்த திருமண விழாவில், பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமியும், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்திரலேகாவும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
 
அப்போது மணமக்களை ஆசிர்வாதம் செய்து, மணமகனுக்கு தாலி எடுத்துக் கொடுக்குமாறு, சுப்பிரமணியன் சாமியிடம் மணமக்கள் வீட்டார் அன்புடன் கேட்டுக் கொண்டனர்.
 
இந்த கோரிக்கையை மறுக்காமல் ஏற்றுக் கொண்ட சுப்பிரமணியன் சாமி மணமேடைக்கு சென்றார். அப்போது மணமகனுக்கு தாலி எடுத்து கொடுப்பதற்கு பதில், மணமகளுக்கு அவரே தாலி கட்ட முயன்றார். திருமணத்திற்கு வந்த அனைவரும் இதைக் கண்டு திடுக்கிட்டனர்.
 
அப்போது, முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்திரலேகா, சுப்பிரமணியன் சாமியின் செயலை உடனே தடுத்து, மணமகன் கையில் தாலியை எடுத்துக் கொடுக்குமாறு கூறினார்.
 
பின்பு, ஒருவழியாக சுதாரித்துக் கொண்ட சுப்பிரமணியன் சாமி, மணமகனிடம் தாலியை எடுத்துக் கொடுத்தார். அதை வாங்கி கொஞ்சமும் தாமதம் செய்யாமல், மணமகன் உடனடியாக மணமகள் கழுத்தில் தாலியை கட்டி நிம்மதி பெரு மூச்சுவிட்டார்.
 
அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் சுப்பிரமணியன் சாமி, நெல்லையில் கொஞ்ச நேரம் தாமதம் செய்து இருந்தாலும், திருமண வீட்டில் தமிழகமே எதிர்பாராத வகையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருப்பார்.