1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வெள்ளி, 19 டிசம்பர் 2014 (19:41 IST)

கோவில் திருவிழாவின்போது பெண்களை கேலி செய்த மாணவன் வெட்டிக் கொலை

கோவில் திருவிழாவின்போது பெண்களை கேலி செய்த மாணவன் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
 
நெல்லை மாவட்டம் வள்ளியூர் சாந்திநகரை சேர்ந்தவர்கள் மகாராஜன் (17), மாரீஸ்வரன் என்ற மாயாண்டி (17). இருவரும் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தனர்.
 
சில நாட்களுக்கு முன்பு வள்ளியூர் முருகன் கோவிலில் தெப்பத்திருவிழாவில் மகாராஜன் நண்பர்களுடன் கலந்து கொண்டுள்ளார். அப்போது மகாராஜன் மற்றும் அவரது நண்பர்கள் அங்கு நின்று கொண்டிருந்த பெண்களை கேலி, கிண்டல் செய்துள்ளனர்.
 
இதனால் ஆத்திரம் அடைந்த வள்ளியூர் மறவர் காலனியை சேர்ந்த ஜெகன்முத்து, அருண்பாண்டியன் ஆகிய 2 பேரும் மகாராஜன் மற்றும் அவரது நண்பர்களை கண்டித்தனர். இதனால் அவர்களுக்கிடையே வாக்கு வாதம் ஏற்பட்டது.
 
இந்நிலையில், நேற்றிரவு வள்ளியூர் கால்நடை மருத்துவமனை அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் மகாராஜனையும், மாயாண்டியையும் அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டனர்.
 
இருவருக்கும் கழுத்து, கை உள்ளிட்ட இடங்களில் வெட்டு விழுந்தது. பலத்த காயம் அடைந்த மகாராஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உயிருக்கு போராடி கொண்டிருந்த மாயாண்டியை அக்கம் பக்கத்தினர் மீட்டு நாகர்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
 
இந்த விரோதம் காரணமாக ஜெகன்முத்துவும், அருண்பாண்டியனும் சேர்ந்து மகாராஜனை வெட்டி கொலை செய்தது தெரியவந்தது. தலைமறைவான கொலையாளிகள் இருவரையும் பிடிக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
 
இதனால், இன்று வள்ளியூரில் இருந்து நெல்லைக்கு வந்த 5 அரசு பேருந்துகள் மீது மர்ம கும்பல் கற்களை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் 5 பஸ்களின் கண்ணாடிகளும் முற்றிலுமாக உடைந்தது.