வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By ஈரோடு வேலுச்சாமி
Last Modified: திங்கள், 29 செப்டம்பர் 2014 (12:45 IST)

கடம்பூர் அருகே கனமழை - திடீர் அருவிகள் - காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி, பள்ளி மாணவன் பலி

ஈரோடு அருகே கடம்பூர் மற்றும் தாளவாடி மலைப் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி, பள்ளி மாணவர் ஒருவர் பரிதாபமாக இறந்தார்.

 
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ளது, கடம்பூர் மலைப் பகுதி. கடல் மட்டத்தில் இருந்து 750 மீட்டர் உயரம் கொண்ட இந்த மலைப் பகுதி, முற்றிலும் வனத்தால் சூழப்பட்டது ஆகும். இந்த மலைப் பகுதியில் கடந்த சில மாதங்களாக மழையின்றி வறட்சியாகக் காணப்பட்டது. கடந்த மூன்று நாட்களாக நாள்தோறும் கடம்பூர் மலைப் பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது.
 
இதனால் வனப் பகுதியில் இருந்து வரும் காட்டாறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று மதியம் கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள மாக்கம்பாளையம் கோம்பையூரைச் சேர்ந்த பந்தையன் என்பவரது மகன் சிவராஜ் (16). இவர் அரசு பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று மதியம் சைக்கிள் மூலம் மாக்கம்பாளையம் வழியாகச் சென்ற காட்டாற்று வெள்ளத்தைக் கடந்தார். அப்போது தண்ணீர் இழுத்து சென்றதால், சிவராஜ் பரிதாபமாக இறந்தார்.

 
பலத்த மழையின் காரணமாக கடம்பூர் மலைப் பகுதியில் ரோடுகள் மற்றும் விவசாய வழித்தடங்கள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டன. நேற்று இரவு கடம்பூரில் மின் கம்பத்தின் மீது மரம் விழுந்ததால் விடிய, விடிய இப்பகுதி மக்கள் இருட்டில் சிரமப்பட்டனர். தாளவாடி மலைப் பகுதியிலும் இதே போல் பலத்த மழை பெய்தது. இதனால் வனப் பகுதியில் உள்ள குளம், குட்டைகளில் தண்ணீர் நிரம்பிக் காணப்படுகிறது.

 
வனப் பகுதியில் பெய்த கன மழையின் காரணமாகக் குளம், குட்டைகள் நிரம்பியதால் வனப் பகுதியில் உள்ள வன விலங்குகளுக்குத் தண்ணீர்ப் பிரச்சினை தீர்ந்துள்ளது. கே.என். பாளையத்தில் இருந்து கடம்பூர் செல்லும் சாலையில் திடீர் அருவிகள் தோன்றியுள்ளன. இந்த அருவிகளில் இப்பகுதி மக்கள் ஆனந்தமாக விளையாடி மகிழ்கின்றனர்.