1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வியாழன், 5 அக்டோபர் 2017 (10:22 IST)

மின்னல் தாக்கியதில் செல்போன் சார்ஜர் வெடித்து மாணவன் மரணம்

மின்னல் தாக்கியதில் செல்போன் சார்ஜர் வெடித்து மாணவன் மரணம்

சென்னையில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையின் போது மின்னல் தாக்கியதில் சார்ஜர் வெடித்து அருகில் உள்ள செல்போன் எரிந்துள்ளது. அந்த தீ அருகில் படுத்திருந்த மாணவன் ஒருவன் மீதும் பரவி அவனது உயிரை பறித்த சோகச்சம்பவம் நடந்துள்ளது.


 
 
சென்னை செங்குன்றத்தை அடுத்த நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட சமத்துவபுரத்தை சேர்ந்த ரஞ்சித் என்ற 21 வயதான மாணவன் ஒருவன் திருவள்ளூர் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பொறியியல் இறுதியாண்டு படித்து வந்தான். மாணவன் ரஞ்சித் நேற்று முன்தினம் இரவு தனது செல்போனுக்கு சார்ஜர் போட்டுவிட்டு அதன் அருகில் படுத்திருந்தான்.
 
அப்போது நள்ளிரவு 1.30 மணியளவில் அப்பகுதியில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்துள்ளது. அந்த மழையின் போது வந்த மின்னல் தாக்கியதில் சார்ஜர் வெடித்து செல்போன் தீப்பிடித்து எரிந்தது. இதனையடுத்து இந்த அருகில் படுத்திருந்த மாணவன் ரஞ்சித் மீதும் பரவியுள்ளது.
 
இதனால் தூக்கத்தில் இருந்த மாணவன் ரஞ்சித்திற்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டு வலியால் துடித்துள்ளான். இதனையடுத்து உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் மாணவன் ரஞ்சித்தை பரிசோதித்த மருத்துவர்கள் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.