வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 13 செப்டம்பர் 2018 (09:46 IST)

ஆட்சியை கவிழ்க்க காய் நகர்த்தும் ஸ்டாலின் : அதிர்ச்சியில் எடப்பாடி

அதிமுக அமைச்சர்களின் மீது தொடர் ஊழல் புகார்களை திமுக தரப்பு கூறி வருவது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

 
குட்கா விவகாரத்தில் அமைச்சர் விஜயபாஸ்கரும், உள்ளாட்சி துறை தொடர்பான அரசு ஒப்பந்தங்களை தனது பினாமிகள், உறவினர்கள் மற்றும் நெருக்கமானவர்களுக்கு வழங்கி முறைகேடு செய்ததாக எழுந்த புகாரில் அமைச்சர் வேலுமணியும் ஆதாரத்துடன் சிக்கியுள்ளனர். 
 
ஆனாலும், தாங்கள் எந்த தவறு செய்யவில்லை என அவர்கள் தொடர்ந்து கூறி வருகிறார்கள். மேலும், அவர்களிடம் விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்காமலும், அவர்களை அமைச்சர் பதவியிலிருந்து நீக்காமலும் முதல்வர் பழனிச்சாமி அமைதி காத்து வருகிறார்.
 
ஆனால், இருவரையும் அமைச்சர் பதவியிலிருந்து நீக்குவதோடு, விசாரணையும் நடத்தப்பட வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து கூறி வருகிறார். அதுபோக, அமைச்சர் வேலுமணி மீது லஞ்ச ஒழிப்புத்துறையிடம் திமுக தரப்பில் புகாரும் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் பின்னரும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனில், திமுக தரப்பு நீதிமன்றம் செல்லும் எனத் தெரிகிறது.

 
இந்நிலையில், இந்த விவகாரம் அடங்குவதற்குள் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணியை திமுக தரப்பு டார்கெட் செய்துள்ளது. தமிழகத்தில் மின்வெட்டு அதிகரித்து விட்டது. நிலக்கரி கொள்முதல், மின்வாரிய ஊழியர்கள் பணியிடமாற்றத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக குற்றம் சாட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
 
இப்படி தொடர்ந்து அதிமுக அமைச்சர்களை ஸ்டாலின் டார்கெட் செய்திருப்பது எடப்பாடி தரப்புக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது. அதவாது, தங்கமணியும், வேலுமணியும் எடப்பாடி பழனிச்சாமிக்கு மிகவும் நெருக்கமான, வலதுகரமாக செயல்படுவர்கள். அவருக்கும் டெல்லிக்கும் இடையே பாலம் போல் செயல்படுபவர்கள். எனவே, அவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தினால், அவர்களின் கவனம் அதை நோக்கியே இருக்கும். அதிமுக ஆட்சியை எளிதில் கவிழ்க்கலாம் என ஸ்டாலின் தரப்பு திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.
 
இதனை புரிந்து கொண்ட முதல்வர், அதிமுக ஆட்சியை கவிழ்க்க ஸ்டாலின் தீவிரமாக செயல்படுகிறார். ஸ்டாலின் என்ன புகார் கூறினாலும், உடனே அமைச்சர்கள் மறுப்பு தெரிவித்து செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுங்கள் என உத்தரவிட்டுள்ளாராம்.