வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 28 ஜூலை 2018 (11:05 IST)

கதறி அழுத ஸ்டாலின் ; கோஷமிட்ட தொண்டர்கள் : கோபாலபுர உணர்ச்சி நிமிடங்கள்

திமுக தலைவர் கருணாநிதியை கோபாலபுரம் இல்லத்தில் இருந்து நேற்று இரவு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது திமுக செயல் தலைவர் மற்றும் தொண்டர்கள் கண்ணீர் விட்ட காட்சி பலரையும் கலங்கடித்தது.

 
வயது முதிர்வு மற்றும் உடல் நிலைக்கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடல் நிலையில் கடந்த சில நாட்களாக நலிவு ஏற்பட்டுள்ளது.  கடந்த 2 நாட்களாக கோபாலபுரம் இல்லத்திலேயே மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர். அதனைத் தொடர்ந்து அவரின் உடலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதாக நேற்று மாலை ஸ்டாலின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
 
அதேபோல், நேற்று இரவு 10.30 மணியளவில் ஸ்டாலின் கோபாலபுரத்திலிருந்து கிளம்பி சென்றார். அந்நிலையில்தான், இரவு 12 மணிக்கு மேல் கருணாநிதியின் உடல்நிலை மோசமானது. எனவே, காவிரி மருத்துவமனையிலிருந்து மருத்துவர்கள் அவசரமாக கோபாலபுரம் வந்து அவருக்கு சிகிச்சை அளித்தனர்.
 
அதைத் தொடர்ந்து ஸ்டாலின், அழகிரி, கனிமொழி, துரைமுருகன், ஆ.ராசா உள்ளிட்டோரும் அங்கு வந்தனர். எனவே, கலைஞருக்கு என்னமோ ஏதோ என அங்கு பரபரப்பு நிலவியது. மருத்துவர்களின் அறிவுரைப்படி கருணாநிதியை மருத்துவமனையில் அனுமதிப்பது என முடிவு செய்யப்பட்டது.
 
அவரை வீட்டிலிருந்து வெளியே கொண்டு வந்து  ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றும்போது ஸ்டாலின் கண்ணீர் விட்டு அழுதார். அவருக்கு அருகில் நின்ற துரைமுருகன், ஜெகத்ரட்சகன் உள்ளிட்டோரும் கண்கலங்கி நின்றனர். அங்கு திரண்டிருந்த திமுக தொண்டர்கள் ‘தலைவா.. தலைவா...எழுந்து வா தலைவா.. கலைஞர் வாழ்க’ என கோஷமிட்டபடி கதறி அழுதனர். 
 
1.30 மணியளவில் கருணாநிதி காவிரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
 
அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்பி வர வேண்டும் என திமுக தொண்டர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.