வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : புதன், 6 ஜனவரி 2016 (09:53 IST)

மோடி அரசு எப்படியோ, ஜெயலலிதா அரசும் அப்படியே - வைகோ சாடல்

மோடி அரசு எப்படியோ, ஜெயலலிதா அரசும் அப்படியே - வைகோ சாடல்

நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு எப்படி சகிப்பின்மையோடு செயல்படுகிறதோ, அதேபோல் தமிழகத்தில் ஜெயலலிதாவும் சகிப்புத்தன்மை அற்றவராக இருக்கிறார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
 

 
திருப்பூரில் நடைபெற்ற மதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்திருந்த வைகோ செய்தியாளர்களிடம் பேசியபோது, "கிரானைட் ஊழல் தொடர்பாக சகாயம் அறிக்கை குறித்து அதிமுக, திமுக இரண்டும் மௌனமாக உள்ளன. கிரானைட் முறைகேடு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
 
நரேந்திரமோடி தலைமையிலான பாஜக அரசு எப்படி சகிப்பின்மையோடு செயல்படுகிறதோ, அதேபோல் தமிழகத்தில் ஜெயலலிதாவும் சகிப்புத்தன்மை அற்றவராக இருக்கிறார். அதன் காரணமாக பத்திரிகைகள் மீது அவதூறு வழக்கு தொடுக்கப்படுகிறது.
 
2011ஆம் ஆண்டு திமுகவை ஆட்சியை விட்டு அகற்ற வேண்டும் என்று மக்கள் எந்த மனநிலையில் இருந்தார்களோ அந்த வெறுப்பு இன்றுவரை நீங்கவில்லை. தமிழகத்தில் மீத்தேன் திட்டம் கொண்டு வந்தபோது அன்றைக்கு துணை முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலின் ஆதரித்து கையெழுத்திட்டார்.
 
இன்றைக்கு ஏதோ அரசியலுக்கு புதிதாக வந்தவர் போல், நல்லாட்சி தருவோம் என்று நாடகம் ஆடுகிறார். அன்றைக்கு ஏன் கையெழுத்திட்டார் என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
 
எந்த கட்சியையும் சாராத இளம்பெண்கள், இளைஞர்கள், மாணவர்கள் 65 சதவீதம் பேர் உள்ளனர். இவர்கள் சமூக பிரச்சனைகள் குறித்து சமூக வலைதளங்களில் விவாதித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த உணர்வைபுரிந்து கொண்டு குறைந்த பட்சசெயல்திட்டத்தை உருவாக்கி மக்கள் நலக்கூட்டணி செயல்பட்டுவருகிறது.
 
மக்கள் நலக்கூட்டணிக்கு வருமாறு விஜயகாந்த், வாசன் ஆகியோருக்கு அழைப்புவிடுத்துள்ளோம். அவர்கள் வருவார்கள் என்று நம்புகிறோம்.2016 தமிழக சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி ஆட்சி அமைக்கும்” என்று தெரிவித்துள்ளார்.