வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வியாழன், 9 பிப்ரவரி 2017 (23:28 IST)

’தமிழகத்தில் மோதல் முற்றி சட்டம் ஒழுங்கு சீர்கெடும்’ - எச்சரிக்கும் திருநாவுக்கரசர்

தமிழகத்தில் தலித்துகளுக்கு எதிராக வன்கொடுமைகள் தொடர்ந்து நடைபெற்றால், சமூக மோதல் முற்றி, சட்டம் ஒழுங்கு சீர்கேடு அடைகிற நிலை ஏற்படும் என எச்சரிக்கிறேன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு. திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’தமிழகத்தில் தலித்துகளுக்கு எதிராக வன்கொடுமைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்தியாவிலேயே தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமைகள் தமிழகத்தில் அதிகமாக இருப்பதாக தேசிய குற்ற ஆவண காப்பக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் தலித்துகளுக்கு பாதுகாப்பில்லை என்பதை அரியலூர் இளம் பெண் நந்தினி படுகொலை அம்பலபடுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம் செந்துரை அருகே உள்ள சிறுகடம்பூர் கிராமத்தை சேர்ந்த சித்தாள் வேலை செய்து கொண்டிருந்த 17 வயது இளம்பெண் நந்தினியை அதே கிராமத்தைச் சேர்ந்த இந்து முன்னணி ஒன்றிய செயலாளர் மணிகண்டன் என்பவர் காதலித்து, கற்பழித்து கொலை செய்துள்ளார். காவல்துறையினரின் விசாரணைக்குப் பிறகு மணிகண்டன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தலித்துகளுக்கு எதிரான வழக்குகளில் உரிய விசாரணையும், தொடர் நடவடிக்கையும் இல்லாத மாநிலங்களில் தமிழகம் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இந்த ஆணையத்தின் அறிக்கையின்படி உத்தரபிரதேசத்தில் 2024 வழக்குகளும், தமிழகத்தில் 999 வழக்குகளும் விசாரிக்கப்படாமல் நிலுவையில் உள்ளதாக கூறியுள்ளன. இத்தகைய போக்கு தமிழ்நாட்டில் இருப்பதால் தான் தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமை பல பகுதிகளில் தலைவிரித்தாடி வருகிறது. இத்தகைய போக்கு நந்தினி கொலை வழக்கிலும் பின்பற்றப்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது.

எனவே, இத்தகைய கொடுமைகளை தடுத்து நிறுத்த ஆட்சியாளர்கள் முன்வரவில்லை என்றால் தமிழகத்தில் சமூக மோதல் முற்றி, சட்டம் ஒழுங்கு சீர்கேடு அடைகிற நிலை ஏற்படும் என எச்சரிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.