வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Updated : திங்கள், 8 பிப்ரவரி 2016 (00:02 IST)

சமஷ்டி முறை கொண்டு வர வேண்டும்: கி.வீரமணி

சமஷ்டி முறை கொண்டு வர வேண்டும்: கி.வீரமணி

இலங்கையில், தமிழர்கள் நலன் காக்க, சமஷ்டி முறை கொண்டு வர வேண்டும் என்று கி. வீரமணி கருத்து தெரிவித்துள்ளார்.
 

 
இது குறித்து, திராவிடர் கழகத் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
இலங்கை அதிபர் மைத்ரிபால சிறீசேனா, பிப்ரவரி 2 ஆம் தேதி அன்று இலங்கை சுதந்திரக் கட்சியின் மத்தியக் குழுக் கூட்டத்தில் உரையாற்றிய போது, புதிதாக உருவாக்கப்படும் இலங்கை அரசமைப்புச் சட்டத்தில், கூட்டாட்சி அமைப்பு முறைக்கு இடம் இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
 
சிறீசேனா அறிவித்த புதிய அரசமைப்புச் சட்டத்தில், நாடாளுமன்றத்திற்கு அனைத்து அதிகாரங்களும் வழங்கப்படும், மாகாணங்கள் தன்னிச்சையாக எந்த ஒரு முடிவும் எடுக்க முடியாது, மக்களால் தேர்வு செய்யப்பட்ட  மாகாணசபைகளுக்கு முழு அதிகாரங்களை வழங்க முடியாது, தீர்மானங்களை நிறைவேற்றும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு மட்டுமே உண்டு, அதிகாரப் பரவல் முறை இலங்கை அரசமைப்புச் சட்டத்தில் கொண்டுவர இயலாது.
 
இவை எல்லாம் தமிழர்களை ஒடுக்குவதிலும், இரண்டாம் தரக் குடிகளாக நிரந்தரமாகக் கட்டிப் போடுவதிலும் மட்டும் மாற்றம் இருக்கவே இருக்காது என்பதை காட்டுகிறது.
 
இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இலங்கை சென்றுள்ளார். தமிழ் மாகாண முதல் அமைச்சர், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரை சந்திக்கக்கூட அனுமதி இல்லை என்றால் இலங்கை அரசின் இனவெறி மனப்பான்மைக்கு வேறு என்ன எடுத்துக்காட்டுத் தேவை?
 
இலங்கை சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர், இலங்கை அரசு கொண்டு வர உத்தேசித்துள்ள புதிய அரசமைப்புச்சட்டம் தமிழர்களுக்குப் பாதகமானது என்று எடுத்துக்கூறி, சமஷ்டி முறை கொண்டு வர வேண்டும் என்று வற்புறுத்த வேண்டும். அப்போது தான் இந்த பயணம் முழுமை பெறும்.
 
தனி நாடு விடுதலையைக் கைவிட்டு, குறைந்தபட்சம்  கூட்டாட்சி முறைக்குக்கூட இலங்கை அரசு ஒப்புக் கொள்ளவில்லை என்றால், ஈழத் தமிழர்களுக்கு அறவே பாதுகாப்பு இல்லை என்பதை சொல்லாமல் சொல்லி விட்டது இலங்கை இன வெறி அரசு.
 
இந்திய அரசுக்கு இந்தக் கால கட்டத்தில் மிக முக்கிய பொறுப்பும், கடமையும் உள்ளது. உலக நாடுகளின் கவனமும், தலையீடும்கூட அவசியமாகி விட்ட தருணம் இது. கட்சிகளை மறந்து தமிழ்நாட்டுத் தமிழர்கள் ஒத்த குரல் கொடுக்க முன் வர வேண்டும்.
 
உலகில் தமிழர்களுக்கென்று ஒரு நாடு இல்லை என்பதற்காக தமிழர்களை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நினைப்பிற்கு முடிவு கட்டப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.