வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Modified: சனி, 20 டிசம்பர் 2014 (11:18 IST)

பாலுறவு இணையதளங்களை தடை செய்ய வேண்டும் - திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பாலுறவு இணையதளங்களை தடை செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

அண்மையில் தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே நந்தினி என்கிற பள்ளிச் சிறுமியும், வேலூர் மாவட்டம் குடியாத்தம் காங்குப்பம் கிராமம் கிருத்திகா என்கிற பள்ளிச் சிறுமியும் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட கொடூரம் நிகழ்ந்துள்ளது.

நந்தினியை பாழ்படுத்திய இளைஞர்களும், குடிபோதையில் இத்தகையச் செயலில் ஈடுபட்டதாகத் தெரிய வருகிறது. குடியாத்தம் கிருத்திகாவை பாழ்படுத்திய மாணவன் அடிக்கடி இணையதளங்களில் பாலுறவுக் காட்சிகளைப் பார்க்கக் கூடியவர் என்று தெரிய வருகிறது.

இளைய தலைமுறையினைச் சீரழிக்கும் வகையிலான சமூக சூழல்களை அனுமதித்துக் கொண்டு, இத்தகையக் கொடும் குற்றங்களை எவ்வாறு தடுத்திட இயலும்.

மதுவினால் மனித உறவுகள் கடுமையாகப் பாதிப்படைந்து வருகின்றன. அரசின் தவறானக் கொள்கை முடிவுதான் நந்தினி, கிருத்திகா போன்ற பச்சிளம் சிறுமிகளின் சீரழிவுக்குக் காரணமென்பதை நாம் உணர வேண்டும்.

அத்துடன் கைப்பேசிகளிலும், கணினிகளிலும் பாலுறவுக் காட்சிகளைக் கொண்ட இணையதளங்களால் இளம் தலைமுறையினர் பாதை தவறும் நிலை ஏற்பட்டுள்ளது.

தெருக்குத் தெரு திறந்து வைக்கப்பட்டுள்ள மதுபானக் கடைகளை அரசு உடனடியாக மூட வேண்டும். பாலுறவு இணைய தளங்களை தடைச் செய்ய வேண்டும்.

இவற்றிக்கு மாநில அரசுகள் மட்டுமே பொறுப்பாக முடியாது. இந்திய அரசு, இவை குறித்து தேசியக் கொள்கை ஒன்றை வரையறுக்க வேண்டும்.

மதுவிலக்கு என்பது இந்திய அரசின் தேசியக் கொள்கையாக அறிவிக்கப்பட்டு அரசு மதுபான கடைகள் யாவற்றையும் உடனடியாக இழுத்து மூட வேண்டும். அதற்கான சட்டத்தையும் இந்திய அரசு இயற்ற வேண்டும்.

அதேபோல பாலுறவு இணையதளங்களைத் தடைச் செய்யும் வகையில் தேசியக் கொள்கைகளை வரையறுப்பதுடன் அவற்றிக்கான சட்டத்தையும் இயற்ற வேண்டுமென்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.