1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வியாழன், 15 செப்டம்பர் 2016 (18:20 IST)

கர்நாடகாவில் தமிழன் தாக்கப்படும் போது இது தேவையா?: ஜெ.வுக்கு சீமான் கேள்வி

கர்நாடகாவில் தமிழன் தாக்கப்படும் போது இது தேவையா?: ஜெ.வுக்கு சீமான் கேள்வி

காவிரி விவகாரத்தில், கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் இன்று சென்னையில் கண்டன பேரணி நடத்தினர். 


 

 
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடந்த இந்த பேரணியில் இயக்குனர் அமீர், சேரன், ரவி மரியா மற்றும் நாம் தமிழர்கள் நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோர் இந்த பேரணியில் கலந்து கொண்டனர். 
 
சென்னை எழும்பூரில் ஆரம்பித்த இந்த பேரணி புதுப்பேட்டை அருகே வந்த போது நாம் தமிழர் கட்சியை சேர்ந்த இளைஞர் ஒருவர் திடீரென தீக்குளித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதன்பின் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
 
அதன்பின் நடந்த பொதுக்கூட்டத்தில் சீமான் பேசிய போது “ அண்டை நாடுகளுடன் இந்தியா தண்ணீரை பங்கிட்டுக் கொள்கிறது. ஆனால், நமது அண்டை மாநிலத்திடம் தண்ணீர் பெறுவதற்கு சிக்கல் ஏற்படுகிறது. 
 
கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுகின்றனர். தமிழர்களின் வாகனங்களை கொழுத்துகிறார்கள். ஏராளமானோர் தமிழகத்திற்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். 
 
ஆனால், தமிழர்கள் மீதான தாக்குதல்களை நிறுத்த வேண்டும். கர்நாடகாவில் வசிக்கும் தமிழர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா குரல் கொடுக்கவில்லை. 
 
மாறாக அதிமுக கட்சியில் புதிதாக இணைந்தவர்களை வரவேற்கும் விழாவில் கலந்து கொள்கிறார். இந்த பிரச்சனையெல்லாம் முடிந்த பின் அவர் இதை செய்திருக்கலாம்” என்று கூறினார்.