வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : திங்கள், 26 டிசம்பர் 2016 (17:24 IST)

போயஸ் கார்டனில் காவல் காத்த போலீசார் வாபஸ் - ஓ.பி.எஸ் அதிரடி

முன்னாள்  முதல்வர் ஜெயலலிதா வசித்து வந்த போயஸ் கார்டன் வீடு அருகில் காவல் காத்து வந்த ஏராளமான போலீசாரை தமிழக அரசு திரும்ப பெற்றுக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


 

 
ஜெயலலிதா மரணம் அடைவதற்கு முன்பும் சரி, தற்போதும் சரி. அவரின் வீடு இருக்கும் தெரு தொடங்கி, அவரின் வீடு வரை, கடுமையான கெடுபிடிகள் பின்பற்றப்பட்டு வருகிறது. கட்சி தொண்டர்கள் நிர்வாகிகள், அமைச்சர்கள் என போலீசாரை தாண்டி உள்ளே செல்ல முடியாது.
 
அங்கு, தமிழக காவல்துறை சி.ஐ.டி பாதுகாப்பு பிரிவின் முக்கியமான அணியைச் சேர்ந்த நன்கு பயிற்சியளிக்கப்பட்ட ஏறத்தாழ 240 பேர் தற்போதும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். 


 

 
இந்நிலையில், போயஸ் கார்டனில் அரசியல் ரீதியிலான அதிகாரம் படைத்த எவரும் இல்லாத நிலையில், இவ்வளவு காவலர்களும் உயரதிகாரிகளும் நியமிக்கப்பட்டிருப்பது ஏன் என்று திமுக பொருளாளரும், எதிர்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின்  சமீபத்தில் கேள்வி எழுப்பியிருந்தார்.
 
மேலும், நாட்டில் பல குற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கு இந்த சூழ்நிலையில், திறமைமிகு அதிகாரிகளையும் காவலர்களையும் தேவையற்ற பணிகளில் ஈடுபடுத்தி வீணடிக்காமல், உரிய பணிகளுக்கு அனுப்ப வேண்டும். இதற்கு, காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் அமைச்சரான தமிழக முதல்வர் திரு ஒ.பன்னீர்செல்வம்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
 
இந்நிலையில் அங்கு காவல் காத்து காத்து வந்த பெரும்பாலான போலீசார் வாபஸ் பெறப்பட்டதாகவும், தற்போது அங்கு லிங்க் செக்யூரிட்டி ஏஜென்சி என்ற தனியார் பாதுகாப்பு அமைப்பு பொறுப்பை கவனிப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.