1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: சனி, 11 பிப்ரவரி 2017 (14:31 IST)

சென்னையில் கலவரத்தை ஏற்படுத்த திட்டம்?; விடுதிகளில் போலீசார் சோதனை

சசிகலாவிற்கு முதல்வர் பதவி கிடைக்காமல் போனால், சென்னையில் கலவரத்தை ஏற்படுத்த மன்னார் குடி தரப்பு முடிவெடுத்திருப்பதாகவும், அதற்காக ஆயிரக்கணக்கான ரவுடிகளை சென்னையின் பல்வேறு இடங்களில் தங்க வைத்துள்ளதாகவும், அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது.


 

 
அதிமுக எம்.எல்.ஏக்கள் 134 பேரின் ஆதரவும் தனக்கு இருப்பதால்,  தன்னை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என கடந்த 8ம் தேதி ஆளுநரை சந்தித்து சசிகலா கோரிக்கை வைத்தார். ஆனால், இதுவரை ஆளுநர் எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.. 
 
இந்நிலையில், விரைவில் முடிவு எடுக்க வேண்டும் என சசிகலா, ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும், போயஸ் கார்டனில் இன்று அதிமுக தொண்டர்களுக்கு இடையே அவர் பேசிய போது ‘ ஓரளவிற்குதான் பொறுமை காக்க முடியும்.. அதற்கு மேல் செய்ய வேண்டியதை செய்வோம்..” என எச்சரித்துள்ளார்.


 

 
இந்நிலையில், சசிகலாவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்காமல் போனாலோ, ஓ.பி.எஸ்-ஐ முதல்வராக அறிவித்தாலோ, கலவரத்தை ஏற்படுத்த சசிகலாவின் உறவினர்களான மன்னார்குடி கும்பல் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. இதற்காக ஆயிரக்கணக்கான ஆட்கள் வரவழைக்கப்பட்டு, சென்னையில் திருவல்லிக்கேனி உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
 
இதை அறிந்த ஆளுநர் வித்யாசாகர் ராவ், சென்னையில் உள்ள அனைத்து லாட்ஜ் மற்றும் திருமண மண்டபங்களில் சோதனை நடத்தி அறிக்கை தருமாறு, கமிஷனர் ஜார்ஜிடம் உத்தரவு பிறப்பித்துள்ளார். எனவே, தற்போது போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள்.
 
இந்த விவகாரம் சென்னைவாசிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.