வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வெள்ளி, 4 நவம்பர் 2016 (13:12 IST)

சசிகலா புஷ்பாவின் வலது கை குண்டர் சட்டத்தில் கைது! - அடுத்து யார்?

எம்.பி. சசிகலா புஷ்பாவின் வலது கரமாக இருந்த நெல்லை நாடார் மக்கள் சக்தி இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
 

 
தொடர்ந்து அதிமுகவுக்கு எதிராகவும், சசிகலாவுக்கு எதிராகவும் பேசி வரும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் தங்களை கொடுமைப்படுத்தியதாக பானுமதி, ஜான்சி ஆகிய 2 பெண்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.
 
பாலீயல் ரீதியாக தாங்கள் துன்புறுத்தப்பட்டதாக அந்த பெண்கள் அளித்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களின் சார்பாக வழக்கறிஞர் சுகந்தி என்பவர் வாதாடி வந்தார்.
 
சசிகலா புஷ்பாவுக்கு எதிராக புகார் கூறிய இளம் பெண்களுக்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞர் சுகந்தி ஜேசன் வீடு தாக்கப்பட்டதில் ஹரி நாடார் மீது புகார் கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து ஹரி நாடாரை போலீசார்  கடந்த சில தினங்களுக்கு முன்பு கைது செய்தனர்.
 
பலமுறை சசிகலா புஷ்பாவை கைது செய்ய முயன்றும் முன்ஜாமீன் பெற்று கைது நடவடிக்கையில் இருந்து தப்பித்து வந்தார். இந்நிலையில் அவரது தீவிர ஆதரவாளர் கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
இந்நிலையில், தற்போது சசிகலா புஷ்பாவின் வலது கரமாக இருந்த ஹரி நாடார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.