வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 11 ஜனவரி 2018 (13:22 IST)

சசிகலாவின் கணவர் நடராஜன் நீதிமன்றத்தில் சரணடைந்தார்!

சொகுசு கார் இறக்குமதி வழக்கில் சசிகலாவின் கணவர் நடராஜன் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனையடுத்து அவரது உடல்நிலை மோசமாக இருப்பதால் அவர் நீதிமன்றத்தில் சரணடையாமல் இருந்தார். இந்நிலையில் இன்று அவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.
 
1994-ஆம் ஆண்டு வெளிநாட்டில் இருந்து லெக்சஸ் மாடல் சொகுசு காரை இறக்குமதி செய்ததில் 1.6 கோடிக்கு ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்ததாக சசிகலாவின் கணவர் நடராஜன் மற்றும் அவரது உறவினர்கள் 4 பேர் மீது சிபிஐ வழக்குத் தொடர்ந்தது.
 
இந்த வழக்கை விசாரித்த சிபிஐ நீதிமன்றம் அவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இந்த தண்டனையை சென்னை உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது. ஆனால் தண்டனை விதிக்கப்பட்ட நடராஜன் சிறுநீரக அறுவை செய்ததால் அவரது உடல்நிலை மோசமாகி மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்தார்.
 
இதனையடுத்து நடராஜன் தரப்பு அவரது உடல்நிலையைக் காரணம் காட்டி கீழ் நீதிமன்றத்தில் சரணடைவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. உச்சநீதிமன்றமும் அவருக்கு விலக்கு அளித்தது. இதனை காட்டி சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் ஜாமின் கோரியிருந்த சசிகலாவின் கணவர் நடராஜன் இன்று நீதிமன்றத்தில் சரண்  அடைந்தார்.