1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : புதன், 15 மார்ச் 2017 (14:41 IST)

என்ன நடக்கிறது என விரைவில் பாருங்கள் - ஓ.பி.எஸ் சஸ்பென்ஸ்

சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என அறிவிக்க வலியுறுத்தி ஓ.பி.எஸ் அணி இன்று டெல்லி சென்று, தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியை சந்தித்து பேசினர்.


 

 
அதன்பின் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது ஓ.பி.எஸ் கூறியதாவது:
 
சசிகலா, அதிமுகவின் பொதுச்செயலராக அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படவில்லை. கட்சி விதிகளின்படி தேர்வு செய்யப்படாததால், அவரின் நியமனங்கள் எதுவும் செல்லாது. அவர் கட்சியில் சேர்க்கப்பட்டு 5 வருடம் நிறைவடையவில்லை. 5 வருடங்கள் தொடர்ந்து உறுப்பினராக இருந்தால்தான், பொதுச்செயலாளராக ஒருவரை தேர்ந்தெடுக்க முடியும். அதேபோல் ஃபெரா வழக்கு இருப்பதால், தினகரன் வேட்பாளர் ஆக முடியாது. அவரின் வேட்பு மனுவை தேர்தல் ஆணையம் தள்ளுபடி செய்து விடும்.
 
எனவே, இதுபற்றி தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளோம். தேர்தல் ஆணையத்திடம் அதிமுக சட்ட விதிகளை எடுத்துரைத்தோம்.  விரைவில் நல்ல பதில் கிடைக்கும். எங்களைப் பொறுத்தவரை அதிமுக பொதுசெயலாளர் பதவி காலியாக இருப்பதால், அடுத்த அதிகாரம் அவைத் தலைவர் மதுசூதனனுக்குதான் உண்டு.
 
அதிமுகவில் குடும்ப ஆட்சியை அனுமதிக்க கூடாது என்பதில் ஜெ. உறுதியாக இருந்தார். அதனால்தான்,  2011ம் ஆண்டு சசிகலா குடும்பத்தின் மீது நடவடிக்கை எடுத்தார். இதில் சசிகலா மட்டும் மன்னிப்பு கடிதம் கொடுத்து மீண்டும் சேர்ந்தார். ஆனால், ஜெ.வின் நிலைப்பாட்டிற்கு எதிராக சசிகலா குடும்பத்தினர் செயல்படுகிறார்கள்.
 
வருகிற வெள்ளிக்கிழமை இரட்டை இலை கோரி தேர்தல் கமிஷனிடம் மனு கொடுக்க இருக்கிறோம். ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் எங்கள் அணியின் வேட்பாளரை, இன்னும் ஓரிரு நாளில் அறிவிப்போம்” என அவர் கூறினார்.

அதன்பின்னும் செய்தியாளர் அவரிடம் ஏராளமான கேள்விகளை எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஓ.பி.எஸ், இவ்வளவு நாட்கள் பொறுத்துக் கொண்டீர்கள். இன்னும் சில நாள் பொறுத்திருங்கள் எனக் கூறினார்.