வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வெள்ளி, 19 மே 2017 (13:13 IST)

அந்நிய செலாவணி வழக்கில் கேள்விகளை முன்கூட்டியே தர சசிகலா பிடிவாதம்!

அந்நிய செலாவணி வழக்கில் கேள்விகளை முன்கூட்டியே தர சசிகலா பிடிவாதம்!

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு சிறை தண்டனையை அனுபவித்து வரும் சசிகலா தற்போது அந்நிய செலாவணி வழக்கின் விசாரணையை சந்தித்து வருகிறார். அவரிடம் காணொளி காட்சி மூலம் விசாரணை நடத்த நீதிமன்றம் முன்வந்துள்ளது.


 
 
ஜெஜெ டிவிக்கு ஒளிபரப்பு சாதனங்களை வெளிநாட்டில் இருந்து வாங்கியதில் அந்நிய செலாவணி மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி கடந்த 1996-ஆம் ஆண்டு அமலாக்கத்துறை சார்பில் சசிகலா மற்றும் பாஸ்கரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இந்த வழக்கு நடைபெற்று வருகிறது.
 
இந்நிலையில் இந்த வழக்கில் சசிகலா நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து சசிகலா தற்போது சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருப்பதாலும், அவருக்கு முதுகு வலி இருப்பதாலும் நேரில் ஆஜராவதில் விலக்கு அளித்து காணொளி மூலம் விசாரணை நடத்த சசிகலா சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
 
இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் காணொளி மூலம் விசாரணை செய்வதற்கு சிறை நிர்வாகத்தின் அனுமதி கடிதத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை இன்று மீண்டும் வந்தது. அப்போது சிறை நிர்வாகத்திடம் அனுமதி பெற்றுவிட்டோம் என கூறிய சசிகலா தரப்பு வழக்கறிஞர் புதிதாக மேலும் ஓர் கோரிக்கையை வைத்தார்.
 
அந்நிய செலாவணி வழக்கு தொடர்பான கேள்விகளை அமலாக்கத்துறையினர் முன்கூட்டியே தர வேண்டும் அப்படி தந்தால் குற்றசாட்டு பதிவு செய்யும் நடவடிக்கை எளிதாக இருக்கும் என சசிகலா சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அமலாக்கத்துறையினர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தர். இதனையடுத்து ஜூன் 2-ஆம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.