வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 23 மார்ச் 2018 (16:23 IST)

நாஞ்சில் சம்பத்துடன் சமாதான பேச்சு : தினகரனுக்கு சசிகலா உத்தரவு?

நாஞ்சில் சம்பத்திற்கு சமாதான தூது அனுப்புமாறு டிடிவி தினகரனுக்கு சசிகலா உத்தரவிட்டிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

 
ஜெ.வின் மறைவிற்கு பின் அதிமுகவின் தலைமையாக சசிகலாவை ஏற்க மாட்டேன் என பரபரப்பு கிளப்பிய நாஞ்சில் சம்பத், அடுத்த சில நாட்களிலேயே சசிகலாவுடன் இணைந்து கொண்டார். சசிகலா சிறைக்கு சென்ற பின் தினகரனின் தீவிர ஆதரவாளராக சம்பத் மாறினார். 
 
அந்நிலையில், சமீபத்தில் தினகரன் தனது அணிக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என பெயர் சூட்டினார். மேலும், அதிமுக கொடியில் ஜெ.வின் படத்தை பதிந்து புதிய கொடியை அறிமுகப்படுத்தினார். எனவே, அண்ணாவும், திராவிடமும் இல்லாத இடத்தில் நான் இருக்க மாட்டேன் எனக்கூறி அவரது அணியிலிருந்து நாஞ்சில் சம்பத் வெளியேறினார். மேலும் இனிமேல் அரசியலில் ஈடுபடப்போவதில்லை, இலக்கிய மேடைகளில் மட்டுமே என்னை பார்க்கலாம் என அதிரடி பேட்டி கொடுத்தார்.

 
அந்நிலையில், தனது கணவர் நடராஜனின் மரணத்தை தொடர்ந்து 15 நாட்கள் பரோலில் வெளிவந்துள்ள சசிகலா தற்போது தஞ்சாவூரில் தங்கியுள்ளார். அவரது சகோதரர் திவாகரன் மற்றும் தினகரன் ஆகியோரும் தஞ்சாவூரில்தான் தங்கியுள்ளனர். 
 
இந்நிலையில், தற்போதுள்ள அரசியல் சூழ்நிலை குறித்தும், அதிமுகவை கைப்பற்ற என்னென்ன திட்டங்களை செயல்படுத்துவது என்பது குறித்தும் தனது குடும்ப உறுப்பினர்களுடன் சசிகலா ஆலோசனை செய்து வருவதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது.
 
இந்நிலையில், நாஞ்சில் சம்பத் விலகிய விவகாரத்தில் தினகரன் மீது சசிகலா கோபமாக இருப்பதகவும், உடனடியாக அவருடன் சமாதான பேச்சு நடத்துமாறு உத்தரவிட்டிருப்பதாகவும் தற்போது செய்திகள் வெளிவந்துள்ளது.
 
ஜெ.வின் மறைவிற்கு பின் சசிகலாவின் தலைமையை ஏற்க மாட்டேன் என நாஞ்சில் சம்பத் கூறிய போது, அவரிடம் சமாதானம் பேசுமாறு சசிகலாவிடம் அவரது கணவர் நடராஜன் கூறினார். அதன் பின்னரே நாஞ்சில் சம்பத் சசிகலா அணியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.