வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.vadivel
Last Modified: செவ்வாய், 19 மே 2015 (10:59 IST)

மு.க.ஸ்டாலினுக்கு சுப்பிரமணியன் சாமி பாராட்டு

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் அனைத்துக் கட்சிகளையும் அரவணைத்துச் செல்வது அவரது பக்குவத்தை காட்டுகிறது என சுப்பிரமணியன் சாமி மு.க.ஸ்டாலினை பாராட்டினார்.
 
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் உடன் பிறந்த தம்பி மு.க.தமிழரசுவின் மகன் நடிகர் அருள்நிதியின் திருமண அழைப்பிதழை, தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களை நேரில் சந்தித்து மு.க.ஸ்டாலின் கொடுத்து வருகின்றார்.
 
பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமியை அவரது சென்னை இல்லத்தில் இன்று காலை நேரில் சந்தித்த திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின். அவரது தம்பி மு.க.தமிழரசுவின் மகன் நடிகர் அருள்நிதியின் மகன் திருமண அழைப்பிதழை கொடுத்தார். அதனை சுப்பிரமணியன் சாமி பெற்றுக்கொண்டார்.
 
இந்த சந்திப்பு குறித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன்சாமி கூறுகையில்,  ஜெயலலிதா வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து உச்ச நீதி மன்றத்தில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும். அவ்வாறு அவர்கள் மேல்முறையீடு செய்யத் தவறினால், நான் அதனைச் செய்வேன்.
 
என்னைப் பற்றி, பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜெயலலிதா புகார் கடிதம் எழுதியுள்ளார். நான் ஒன்றும் பள்ளி மாணவர் அல்ல. நரேந்திர மோடி பிரின்சிபல் இல்லை என்றவர்,  மு.க.ஸ்டாலின் அனைத்துக் கட்சிகளையும் அரவணைத்துச் செல்வது அவரது பக்குவத்தை காட்டுகிறது என பாராட்டினார்.
 
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்திற்கு சென்றால் மட்டுமே, மக்களுக்கு உண்மை தெரிய வரும் என்றார்.
 
தமிழகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை எதிர்த்து அரசியல் செய்து வரும் சுப்பிரமணியன் சாமி, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை பாராட்டியுள்ளது குறிப்பிடதக்கது.