வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: திங்கள், 4 மே 2015 (17:20 IST)

ஐஏஎஸ் அதிகாரி சகாயம் பெயரில் நற்பணி மன்றம்: தமிழகத்தில் பரபரப்பு

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் பெயரில் நற்பணி மன்றம் துவங்கப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
இந்த நிலையில் தான், நேர்மையான அதிகாரி என பெயர் எடுத்த ஐஏஎஸ் அதிகாரி சகாயம் பெயரில் சென்னை, கோவை, நாமக்கல், ஈரோடு, கரூர், போன்ற பல்வேறு மாவட்டங்களில் நற்பணி மன்றம் துவங்கப்பட்டுள்ளது.
 
இந்த நற்பணி மன்றம் துவங்கியது குறித்து அதன் முக்கிய நிர்வாகி  ஒருவரிடம் பேசிய போது, அவர் நம்மிடம் கூறியதாவது, 
 
நமது நாட்டில் பொது மக்கள் தங்களது தேவைக்கு அதாவது குடும்ப அட்டை,  சாதி சான்றிதழ் , வருமான சான்றிதழ் போன்றவற்றை பெற லஞ்சம் கொடுத்தே பெற வேண்டிய நிலையில் உள்ளனர். இது போன்ற பல துறைகளில் உள்ள ஊழலை அடியோடு வெறுக்கின்றனர்.  
 
தமிழ் திரைப்படத்துறையில் ஜொலித்த எம்.ஜி.ஆர். கருணாநிதி, ஜானகி, ஜெயலலிதா போன்றவர்களையே தமிழக முதலமைச்சர் நாற்காலியில் பொது மக்கள் அமர வைத்து அழகு பார்த்தனர். 
 
இதன் காரணமாகவே, பொது மக்கள் விரும்பும் வகையில் மக்களுக்கு எதிராக இருக்கும் ரவுடிகள் மற்றும் குற்றவாளிகளை சினிமாவில் துரத்திப்பிடித்து அடித்து , உதைத்து, நேர்மையான காவல்துறை அதிகாரியாக ரஜினிகாந்த், விஜயகாந்த், சத்தியராஜ், அஜித்குமார், விக்ரம், விஜய் போன்றவர்கள் சினிமாவில் இன்று வரை தங்களுக்கு என தனி அடையாளத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளனர். அது மட்டும் அல்ல கடந்த சில வருடங்களுக்கு முன்பு கூட விஜயகாந்த் நடித்த ரமணா படம் ஊழக்கு எதிராக பெரும் வெற்றி பெற்றது. 
 
வரும் காலத்தில் உலக அரங்கில் இந்தியா வல்லரசாக இருக்க வேண்டும் என்றும், அதே போல், தமிழகத்தில்  நல்லாட்சி நடைபெற வேண்டும் என  எதிர்பார்க்கின்றனர். 
 
அதன்  வெளிப்பாடாகத் தான் நேர்மையான அதிகாரியான ஐஏஎஸ் அதிகாரி சகாயத்திற்கு நற்பணி மன்றம் துவங்கியுள்ளோம். இதில் அரசியல்வாதிகளுக்கு இடம் இல்லை. எங்களது முக்கியப் பணி பொது மக்களிடம் ஊழலை குறித்த விழிப்புணர்வை மேலும் அதிகப்படுத்துவது தான். நேர்மையான அதிகாரிகள் தமிழகத்தில் மீண்டும் கிடைக்கும் பட்சத்தில் அவர்களுக்கும் நற்பணி மன்றம் துவங்குவோம்  என்கிறார். 
 
டெல்லியில் அரசு அதிகாரியாக வாழ்க்கையை துவங்கிய அரவிந்த் கெஜ்ரிவால் இன்று இந்தியாவின் தலைநகர் டெல்லி முதலமைச்சராக வலம் வருகின்றார். அதே போல சகாயத்திற்கும் ரகசிய ஆதரவாளர் வட்டாரம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில், தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் பெயரில் நற்பணி மன்றம் துவங்கப்பட்ட சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும், கடும் அதிர்வலைகளயும் ஏற்படுத்தியுள்ளது.