வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: திங்கள், 23 அக்டோபர் 2017 (15:14 IST)

விஜய் தலைவராக மாற வேண்டும் - எஸ்.ஏ.சந்திரசேகர் பேட்டி

நடிகர் விஜய் ஒரு தலைவராக உருவாக வேண்டும் என அவரின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் பேட்டியளித்துள்ளார்.


 

 
விஜய் நடித்து சமீபத்தில் வெளியான மெர்சல் படத்தில் ஜி.எஸ்.டி குறித்து தவறான கருத்துகள் கொண்ட வசனம் இடம் பெறுவதாக தமிழிசை சவுந்தராஜான் போர்க்கொடி தூக்கினார். அவரைத் தொடர்ந்து ஹெச்.ராஜா, அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் விஜய்க்கு எதிராக கருத்து தெரிவித்தனர்.  முக்கியமாக ஜோசப் விஜய் என தொடர்ந்து அழைத்து வருகிறார் ஹெச்.ராஜா.
 
இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், நேற்று தனது டிவிட்டர் பக்கத்தில் ‘உண்மை கசக்கும்’ என்ற தலைப்பில், விஜயின் வாக்களர் அட்டை மற்றும் லெட்டர் பேட் ஆகியவற்றை வெளியிட்டிருந்தார். அதில் விஜயின் பெயர் ‘ஜோசப் விஜய்’ என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
அதாவது, விஜய் கிறிஸ்துவராக இருப்பதால்தான் மோடியை எதிர்க்கிறார் என அவர் கருத்து தெரிவித்து வருகிறார். 
 
இந்நிலையில், இதுபற்றி கருத்து தெரிவித்த விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் “விஜயை பள்ளியில் சேர்த்த போது பெயர் - ஜோசப் விஜய், தேசம் - இந்தியா, மதம்- இந்தியன், ஜாதி - இந்தியன்” என்றுதான் குறிப்பிட்டேன். தற்போது அவர் ஒரு நல்ல மனிதராகவே இருக்கிறார்.
பெயரை வைத்து ஒருவரின் மதத்தை அடையாளப்படுத்துவது சிறுபிள்ளைத்தனமானது. அரசியல்வாதிகளுக்கு நம்பிக்கை இல்லை. அதனால்தான் இப்படி பேசி வருகிறார்கள்” என அவர் கூறினார்.
 
மேலும், இன்று ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் “விஜயின் கோபத்தின் வெளிப்பாடே மெர்சல் திரைப்படம். அவர் ஒரு தலைவராக உருவாகி அவரை நம்பியுள்ளவர்களுக்கு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே என் ஆசை. அவர் மீது மதச்சாயத்தை பூச வேண்டாம்” என அவர் வேண்டுகோள் விடுத்தார்.