செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 3 ஜூலை 2018 (12:14 IST)

ரவுடிகளிடம் தனியாக சிக்கிய காவலர் ; 16 இடங்களில் வெட்டு : சென்னையில் அதிர்ச்சி

கட்டுப்பாட்டு அறைக்கு வந்த புகாரை விசாரிக்க சென்ற காவல் அதிகாரிமீது ரவுடிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
சென்னை ராயப்பேட்டை பி.எம்.தர்கா குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் நேற்று இரவு சில ரவுடிகள் மது அருந்தி விட்டு அந்த வழியாக செல்பவர்களிடம் தகராறு செய்வதாக கட்டுப்பாட்டு அறைக்கு ஒருவர் தகவல் கொடுத்தார்.
 
இந்த தகவல் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த முதல் நிலை காவலர் ராஜவேலுக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ராஜவேலு அங்கு சென்று அந்த ரவுடிகளை அங்கிருந்து செல்லுமாறு கூறியுள்ளார். ஆனால், மது போதையில் இருந்த ரவுடிகள் அவரை சராமரியாக தாக்கியுள்ளனர். அவர்களுடன் ராஜவேல் தனியாக போராடியுள்ளார்.
 
அப்போது, அந்த ரவுடிகள் ராஜவேலுவை கத்தி மற்றும் அரிவளால் சராமரியாக தாக்கியுள்ளனர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்துள்ளார். இந்த தகவல் கிடைத்தது, போலீசார் அங்கு விரைந்து சென்றுள்ளனர். போலீசார் வருவதை அறிந்ததும், அந்த ரவுடிகள் ஆட்டோவில் ஏறி தப்பி சென்றனர்.
 
உயிருக்கு போராடிய ராஜவேலுவை போலீசார் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ராஜவேலுவின் தலையில் மட்டும் 16 இடங்களில் வெட்டுக்காயங்கள் உள்ளன. அதுபோக, காது, கன்னம் என உடம்பின் சில இடங்களில் அவருக்கு வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
 
போலீசாரின் விசாரணையில் ராயப்பேட்டை பகுதியில் வசிக்கும் ரவுடியான அரவிந்தன் மற்றும் அவனின் கூட்டாளிகளான ஜிந்தா, வேல்முருகன் உள்ளிட்டோர் ராஜவேலுவை தாக்கியவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அரவிந்தன் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.