வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: செவ்வாய், 30 ஜூன் 2015 (15:02 IST)

ஆர்.கே.நகரில் அதிமுகவுக்கு வெற்றி; ஜனநாயகத்துக்கு தோல்வி: சி.மகேந்திரன் கருத்து

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றாலும், ஜனநாயகம் தோற்றுவிட்டது என இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சி.மகேந்திரன் தெரிவித்துள்ளார்.
 
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றுள்ள நிலையில் இது குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், "ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றாலும், ஜனநாயகம் தோற்றுவிட்டது.
 
இது எதிர்பார்த்த வெற்றி என்பதால் அதிமுக தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், இந்த வெற்றிக்கு பின்னால் ஜனநாயகம் சீரழிந்து கிடக்கிறது என்பதை அவர்கள் உணரவில்லை.
 
தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக அமைச்சர்கள் அனைவரும் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்கள் இலவசங்களையும், சலுகைகளையும் மட்டுமே முன்வைத்து பிரச்சாரம் செய்தனர் என்பது வேதனைக்குரியது.
 
இத்தேர்தலில் நாங்கள் வெற்றியை எதிர்பார்த்து போட்டியிடவில்லை. தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டும் என விரும்பினோம். அதையே செய்துள்ளோம்.
 
இப்போது நாங்கள் பெற்றுள்ள வாக்குகள் மகிழ்ச்சியளிப்பதாகவே உள்ளன" என்றார்.