செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : புதன், 30 ஜூலை 2014 (15:32 IST)

நதிகளை இணைக்க பாஜக அரசு முன்னுரிமை கொடுக்க வேண்டும்: கருணாநிதி வலியுறுத்தல்

நதிகளை இணைக்க பாஜக அரசு முன்னுரிமை கொடுத்து, அதை நிறைவேற்ற வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நதிகள் இணைப்புத் திட்டத்துக்கு கேரள அரசு எதிர்ப்பு தெரிவித்திருப்பதாகச் செய்தி வந்துள்ளது. தேசிய நதிகளை இணைக்க வேண்டும் என்று திமுக ஆட்சியில் 2007-2008 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் வலியுறுத்தப்பட்டது.

நதிகளை இணைக்க வேண்டும் என்று திமுக வழக்குரைஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் 1983 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இது தொடர்பாக அளிக்கப்பட்ட தீர்ப்பில் நதிகளை இணைப்பதற்கான சாத்தியக் கூறுகளை மத்திய அரசு ஆராய வேண்டும் என்று கூறியுள்ளது.

அண்மையில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதியைச் சந்தித்தும் கே.எஸ்.ராதாகிருஷ்ணனும் மாநிலங்களவை உறுப்பினர் தங்கவேலுவும் நதிகளை இணைக்க வலியுறுத்தினர்.

மேலும் மத்திய குடிநீர், சுகாதாரத் துறை, மத்திய நீர் வளத்துறை ஆகியவற்றின் செயலாளர்களுக்கும் பிரதமர் அலுவலகத்துக்கும் அவர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

அதில் "தண்ணீர் தட்டுப்பாட்டால் அதனை நம்பியுள்ள விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்படுவதுடன், குடிநீருக்காக மக்கள் திண்டாடும் நிலையும் உள்ளது.

எனவே, நதிகள் இணைப்பு திட்டத்தை விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.

நதிகளை இணைக்க மத்திய அரசு ஆர்வம் காட்டினாலும், கேரளம் போன்ற சில மாநில அரசுகள் இதற்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன. அந்த எதிர்ப்பை பொருள்படுத்தாமல் இந்தியா முழுவதுக்குமான நன்மையைக் கருத்தில் கொண்டு, நதிகள் இணைப்புத் திட்டத்துக்கு பாஜக அரசு சிறப்பு முன்னுரிமை கொடுக்க வேண்டும். விரைவில் இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

இலங்கை ராணுவம் அடுத்த மாதம் கொழும்புவில் கருத்தரங்கம் ஒன்றை நடத்த உள்ளது. அதில் இந்திய ராணுவம் சார்பில் மேஜர் ஜெனரல் தகுதியில் உள்ள உயர் அதிகாரிகளும், பாஜக சார்பில் அதன் மூத்த தலைவர் சுப்பிரமணியன்சுவாமி தலைமையிலான குழுவினரும் பங்கேற்க உள்ளனர்.

இந்த கருத்தரங்கத்தில் இலங்கைக்கு நட்பு நாடுகள் எத்தகைய பாதுகாப்பு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்பது தொடர்பாக முடிவு செய்யப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

இலங்கை விவகாரத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நடந்துகொண்டதைப் போலவே, பாஜக அரசும் நடந்துகொள்கிறது. அப்படி நடந்துகொள்ளாமல் தமிழ் இனத்தைப் பாதுகாக்கும் நோக்கில் பாஜக அரசு செயல்பட வேண்டும்“ எனறு கருநாநிதி தெரிவித்தார்.