1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 7 ஜனவரி 2019 (09:42 IST)

கண்ணாமூச்சி ஆடுகிறதா தேர்தல் ஆணையம்? அரசியல் டிராமாக்களிடையே முட்டாளாக்கப்படும் மக்கள்!!

தேர்தல் ஆணையத்தின் இந்த திடீர் முடிவால் ஒரு பக்கம் அரசியல் கட்சிகள் சந்தோஷத்தில் மூழ்கினாலும், மக்கள் கடும் கொந்தளிப்பிலே உள்ளனர்.
மக்களை பரபரப்பாக வைத்துக்கொள்வதில் தேசிய கட்சிகள் ஆகட்டு சரி, மாநில கட்சிகள் ஆகட்டும் சரி ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல. அப்படி தமிழகத்தில் அதிமுக பொறுப்பேற்று இரண்டரை வருடங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் உள்ளாட்சி தேர்தல் நடந்த பாடில்லை. ஏன் இன்னும் தேர்தலை நடத்தவில்லை என்று கேட்டால் போதிய சூழல் இன்னும் வரவில்லையாம்.
 
சரி காலியாக உள்ள 20 சட்டமன்ற தொகுதிகளுக்கும் எப்போது தேர்தல் நடத்துவீர்கள் என கேட்டால் தேர்தல் ஆணையமும் தமிழக அரசும் மாறிமாறி கேம் ஆடுகிறார்கள். சமீபத்தில் தேர்தல் ஆணையம் எப்பொழுது தேர்தலை நடத்துவீர்கள் என கேட்டதற்கு, வராத ரெட் அலர்ட்டை காரணம் காட்டி தேர்தலை தள்ளி வைத்தனர் நம் ஆட்சியாளர்கள்.
அப்படி இருக்கும் வேலையில் கடைசியாக மற்ற தொகுதிகளை எல்லாம் விட்டுவிட்டு திடீரென கஜா புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூர் தொகுதிக்கு இந்த மாதம் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையம் திடீரென அறிவித்தது. இதனால் ஆட்டம் கண்டு போன அதிமுக கஜா புயல் நிவாரணத்தை காரணம் காட்டி மீண்டும் தேர்தலை தள்ளி வைக்க சொன்னனர்.
இதற்கிடையே திமுக, அமமுக, நாம்தமிழர் உள்ளிட்ட கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் வேலைகளை ஆரம்பிக்க இருந்தனர்.
 
மீண்டும் குட்டையையை குழப்ப களமிறங்கிய மாநில தேர்தல் ஆணையம், தேர்தல் நடத்தலாமா வேண்டாமா என அனைத்து கட்சி பிரதிநிதிகளையும் கூட்டி முடிவெடுத்து அறிக்கையை சமர்ப்பிக்குமாறு மாவட்ட தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது. அதன்படி நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் திமுக, அதிமுக, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் தற்பொழுது தேர்தல் நடத்துவதற்கு உகந்த சூழ்நிலை அல்ல என கருத்து கூறினர். 
 
இதனையடுத்த இந்த கருத்தை அறிக்கையாக, மாவட்ட தேர்தல் ஆணையம் மாநில தேர்தல் ஆணையிடம் சமர்பித்தது. இதன் விளைவாக  சற்றுமுன் திருவாரூர் தொகுதிக்கு அறிவிக்கப்பட்டிருந்த இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 
இதில் யார் டிராமா ஆடுகிறார்கள்? ஒரு தொகுதியில் தேர்தல் நடத்த வேண்டுமானால் இந்திய தேர்தல் ஆணையம் முதலில், அந்த மாநில அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி, தேர்தல் நடத்த இது உகந்த சூழ்நிலையா என கேட்டறிந்து பின்னரே தேர்தல் குறித்து அறிவிப்பாணை வெளியிட வேண்டும். ஆனால் திருவாரூரை பொறுத்தவரை தேர்தல் ஆணையம் தமிழக அரசை கேட்காமலேயே தேர்தல் குறித்து அறிவிப்பாணையை வெளியிட்டுவிட்டது.
 
காலியாக உள்ள மற்ற தொகுதிகளை எல்லாம் விட்டுவிட்டு திடீரென திருவாரூர் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முனைப்பு காட்டியது ஏன்? தேர்தல் ஆணையம் மத்திய மோடி அரசுடன் சேர்ந்துகொண்டு தமிழக அரசை மிரட்டுவதற்காக இந்த தேர்தல் அறிவிப்பாணையை வெளியிட்டதா என்ற சந்தேகம் எழும்புகிறது.
 
எது எப்படியாயினும் இந்த மத்திய, மாநில அரசுகளின் இந்த அரசியல் டிராமாக்களுக்கு நடுவே மக்கள் தான் பலிகடா ஆக்கப்படுகிறார்கள்.