வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Updated : வியாழன், 24 ஜூலை 2014 (12:47 IST)

சொந்த மகளை 1 ஆண்டாக தொடர்ந்து கற்பழித்த காமக் கொடூர தந்தை: உடந்தையாக இருந்த அண்ணன்

திருவண்ணாமலை மாவட்டத்தில் சொந்த மகளை தொடர்ந்து ஒரு வருடமாக கற்பழித்து வந்த தந்தையும், அதற்கு உடந்தையாக இருந்த மாணவியின் அண்ணனும் கைது செய்யப்பட்டனர்.
 
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தை அடுத்த சிறுவள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த 14 வயது இளம்பெண் சீதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) போளூர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்று கொடுத்தார். அதில் தன்னை பெற்றெடுத்த தந்தையே பாலியல் பலாத்காரம் செய்து வருவதாகவும் அதற்கு சகோதரும் உடந்தையாக செயல்படுவதாகவும் கூறியிருந்தார். இதைக் கேட்ட காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி போளூர் மகளிர் காவல்துறையினர் விசாரணை நடத்தினார்கள். அதில் திடுக்கிடும் தகவல் வெளியானது. 
 
புகார் கொடுத்த சீதாவின் தந்தைக்கு 45 வயது இருக்கும். லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி 12 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சாலை விபத்தில் இறந்து விட்டார். அப்போது மகனும், மகள் சீதாவும் சிறுவன், சிறுமியாக இருந்தனர். அவர்களை சிறுவள்ளூரில் வசிக்கும் பாட்டி பொறுப்பில் விட்டு தந்தை லாரி ஓட்டச் சென்று விடுவார்.

நீண்ட நாள் கழித்துதான் ஊர் திரும்புவார். இதனால் சீதாவை பாட்டி சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள ஒரு பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தார். பள்ளி விடுதியிலேயே சீதா தங்கி படித்து வந்தாள். தற்போது சீதா 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார். விடுமுறையில் ஊருக்கு வந்து செல்வார். அப்போது சீதாவை தனது மகள் என்றும் பாராமல் லாரி டிரைவர் போளூரில் உள்ள லாட்ஜுக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். தந்தையின் கொடுமையை வெளியில் சொன்னால் அவமானமே என்று கருதி அவர் யாரிடமும் சொல்லவில்லை. 
 
ஆனால் அந்த மிருக குணம் படைத்த லாரி டிரைவர் இதையே சாதகமாக பயன்படுத்தி திரும்ப திரும்ப இதுபோல் லாட்ஜில் ரூம் போட்டு தனது கொடூர பசியை தீர்த்து வந்தார். ஒரு ஆண்டாக இது நீடித்து வந்தது. தந்தையின் கொடுமை எல்லை மீறி தொடரவே இனியும் அவமானத்துக்கு பயப்படாமல் துணிந்து போளூர் காவல் நிலையம் சென்று காவல்துறை அதிகாரிகளைச் சந்தித்து முறையிட்டார். பின்னர் புகாராக எழுதிக் கொடுத்தார். 
 
தந்தை தன்னை கொடுமைப்படுத்தும் விஷயத்தை சீதா அண்ணனிடம் சொன்னாள். ஆனால் அவனும் கண்டு கொள்ளாததுடன் தந்தைக்கு ஆதரவாக பேசி உடந்தையாக செயல்பட்டார். இந்த விஷயத்தை வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது என்று சீதாவை தந்தை மிரட்டி இருந்தார். இதனால் பாட்டியிடம் கூட அவளால் சொல்ல முடியவில்லை. போளூரில் லாரி டிரைவர் ஒரே லாட்ஜில் அறை எடுக்காமல் 2 லாட்ஜில் மாறி மாறி தங்கி இருந்துள்ளார். இதனால் லாட்ஜ் ஊழியர்களுக்கு அவர் மீது சந்தேகம் வரவில்லை. 
 
போளூர் மகளிர் காவல் ஆய்வாளர் மலர்க்கொடி இதுபற்றி விசாரணை நடத்தினார். இதையடுத்து தந்தை மீது கற்பழிப்பு, பெண்ணை பலாத்காரம் செய்து குற்றம் புரிதல், சிறுவர்களுக்கு எதிரான பாலியல் குற்றத்தில் ஈடுபடுதல் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. உடந்தையாக செயல்பட்டதாக சகோதரன் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அடுத்த கட்டமாக தந்தையும், சகோதரனும் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். இருவரும் போளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். 
 
தந்தையை வேலூர் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். சகோதரனுக்கு 17 வயது என்பதால் கடலூர் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்க உத்தரவிடப்பட்டது. நேற்று பாதிக்கப்பட்ட சீதாவும் போளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக சேர்க்கப்பட்டார்.