செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வியாழன், 18 ஆகஸ்ட் 2016 (08:39 IST)

சுவாதியை நான் கொலை செய்யவில்லை : நீதிமன்றத்தில் வாய் திறந்த ராம்குமார்

சுவாதியை நான் கொலை செய்யவில்லை : ராம்குமார்

சுவாதி கொலை வழக்கில் திடீர் திருப்பமாக, அவரை நான் கொலை செய்யவில்லை என்றும், போலீசார் தன் மீது பொய் வழக்கு தொடர்ந்துள்ளனர் என்றும் ராம்குமார் நீதிமன்றத்தில் கூறியுள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
சென்னை சூளைமேட்டை சேர்ந்த சுவாதி என்ற இளம்பெண் கடந்த ஜீன் மாதம் 24ஆம் தேதி, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.
 
அந்த கொலை தொடர்பாக, திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். கைது முயற்சியின் போது அவர் தனது கழுத்தை அறுத்துக் கொண்டதால், அப்போது வாக்குமூலம் பெறமுடியவில்லை.
 
அதன்பின் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அவரின் உடல் நிலை தேறிய பின் அவரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அப்போது, சுவாதியை தான் கொலை செய்ததை அவர் ஒப்புக் கொண்டதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டது. 
 
இந்நிலையில், ராம்குமாரின் கையெழுத்தை பெற, அவரை நேற்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினார்.
 
அப்போது  “கையெழுத்திட விருப்பமா?” என்று நீதிபதி கேட்டார். ஆனால் ராம்குமார் “கையெழுத்திட விருப்பமில்லை. நான் சுவாதியை கொலை செய்யவில்லை. போலீசார் பொய்யாக இந்த வழக்கில் என்னை சிக்க வைத்துள்ளனர்.  மேலும், நான் தங்கியிருந்த விடுதியில் உள்ள ஏட்டில் நான் கையெழுத்திட வில்லை” என்று கூறியதாக அவரின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, ராம்குமாரை 26-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி நீதிபதி கோபிநாத் உத்தரவிட்டார்.
 
ராம்குமார் தான் குற்றவாளி என்று போலீசார் கூறிவந்த நிலையில், தற்போது அவர் இப்படி நீதிமன்றத்தில் கூறியுள்ள விவகாரம், இந்த வழக்கில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.