வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : புதன், 8 மார்ச் 2017 (13:45 IST)

சுஷ்மா சுவராஜ் வந்தால்தான் பிரிட்சோ உடலை வாங்குவோம் - ராமேஸ்வரம் மீனவர்கள் உறுதி

கடலில் மீன் பிடிக்கு சென்றபோது, இலங்கை கடற் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட மீனவ இளைஞர் பிரிட்வின் உடலை, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ்  நேரில் வந்தால் மட்டுமே வாங்குவோம் என ராமேசுவரம் மீனவர் சங்க தலைவர் ஜேசுராஜா கூறியுள்ளார்.


 

 
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த பிரிட்சோ(22) என்ற வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். அந்த சம்பவத்தால் மீனவர்கள் அனைவரும் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். 
 
தமிழக மீனவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக பிரதமர் மோடியோ அல்லது இந்திய வெளியுறதுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜோ இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. அமெரிக்காவில் இந்தியர்கள் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து ட்வீட் செய்த சுஷ்மா சுவராஜ் தமிழக மீனவர் இந்தியாவில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
 
இந்நிலையில் பிரிட்சோவின் உடலை வாங்க மறுத்து, அவரின் உறவினர்கள் மற்றும் ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தை கைவிட்டு விட்டு பிரிட்சோவின் உடலை வாங்கிக் கொள்ளுமாறு ராமேஸ்வரம் கலெக்டர் மற்றும் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் நேரில் சென்று மீனவர்களிடம் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், அதற்கு மீனவர்கள் மறுப்பு தெரிவித்து விட்டனர்.
 
இது தொடர்பாக ராமேஸ்வரம் மீனவ சங்க தலைவர் ஜேசுராஜா கூறும் போது “ தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, பிரிட்சோவின் உடலை பெற்றுக் கொள்வதற்கு வாய்ப்பே இல்லை. நாங்களும் பல்வேறு போராட்டங்களை நடத்திவிட்டோம். ஆனால், மத்திய-மாநில அரசுகள் எங்களை காப்பாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவர்கள் இப்படி நடந்து கொள்வதால்தான், இலங்கை கடற்படையினர் எங்கள் மீனவ இளைஞரை சுட்டுக் கொன்றுள்ளனர். 


 

 
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நேரில் வந்து, இது போன்ற தாக்குதல் மீண்டும் நடைபெறாது என உறுதியளிக்க வேண்டும். அப்போதுதான் பிரிட்சோவின் உடலை பெற்றுக்கொள்வோம். மேலும்,  எங்கள் மீனவரை சுட்டுக் கொன்ற இலங்கை கடற்படையினரின் மீது அந்நாட்டு அரசு வழக்குப்பதிவு செய்ய வேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் இரவு பகலாக தொடரும்” என கூறினார்.
 
பிரிட்சோவின் உடலை பெற்றுக் கொள்ளாமல், மீனவர்கள் போராட்டம் நடத்தி வருவதால் ராமேஸ்வரம் பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.