வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Modified: திங்கள், 27 ஏப்ரல் 2015 (13:46 IST)

ஜெயலலிதாவை காப்பாற்ற தமிழக அரசு எடுத்த முயற்சியை உச்சநீதிமன்றம் தவிடுபொடியாக்கியுள்ளது - ராமதாஸ்

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டில் அரசு வழக்கறிஞராக பவானிசிங் நியமிக்கப்பட்டது செல்லாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேல்முறையீட்டு வழக்கில் பவானிசிங்கை அரசு வழக்கறிஞராக நியமித்து அவர் மூலம் ஜெயலலிதாவைக் காப்பாற்ற தமிழக அரசு மேற்கொண்ட முயற்சியையும் இப்போது உச்சநீதிமன்றம் தவிடுபொடியாக்கியுள்ளது.
 
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், மேல்முறையீட்டு வழக்கில் பவானிசிங்கை அரசு வழக்கறிஞராக நியமித்து அவர் மூலம் ஜெயலலிதாவைக் காப்பாற்ற தமிழக அரசு மேற்கொண்ட முயற்சியையும் இப்போது உச்சநீதிமன்றம் தவிடுபொடியாக்கியுள்ளது. இதன்மூலம் நீதி மீண்டும் காப்பாற்றப்பட்டுள்ளது.
 
சொத்துக்குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையின் போது தமிழக அரசால் நியமிக்கப்பட்ட பவானிசிங் முழுக்க முழுக்க ஜெயலலிதா தரப்புக்கு ஆதரவாகவே செயல்பட்டார்.
 
எனவே, இந்த மேல்முறையீட்டை மீண்டும் விசாரிப்பது தான் சரியாக இருக்கும் என்று அனைவரும் கருதினர். உச்சநீதிமன்ற நீதிபதி மதன் லோக்கூர் அளித்த தீர்ப்பிலும் இதையே தெரிவித்திருந்தார்.
 
ஆனால், கால தாமதத்தை தவிர்க்கும் நோக்குடன் இவ்வழக்கில் மறு விசாரணை தேவையில்லை என்று தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு கூறியிருக்கிறது. அதேநேரத்தில் இவ்வழக்கில் அரசு வழக்கறிஞர் பவானிசிங் முன்வைத்த வாதங்கள் எதையும் கருத்தில் கொள்ளத் தேவையில்லை; திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனும், கருநாடக அரசும் தங்கள் தரப்பு வாதத்தை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நீதிபதி குமாரசாமியிடம் நாளைக்குள் எழுத்து மூலம் தாக்கல் செய்ய வேண்டும்; அவர்கள் தரப்பு வாதங்கள் தீர்ப்பில் எதிரொலிப்பதை நீதிபதி குமாரசாமி உறுதி செய்ய வேண்டும்; ஊழல் மிகப்பெரிய சமூகத் தீமை என ஏற்கனவே ஒரு வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பையும் நீதிபதி குமாரசாமி கருத்தில் கொள்ள வேண்டும் என்று தீபக்மிஸ்ரா தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு விரிவான வழிகாட்டுதல்களை வழங்கியிருக்கிறது. எனவே, இந்த வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பு நீதியை நிலைநாட்டும் வகையில் இருக்கும் என நம்பலாம்.
 
பவானிசிங் நியமிக்கப்பட்ட விதம் குறித்து உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்துக்கள் மிகவும் முக்கியமானவை. பவானிசிங்கின் நியமனம் சட்டவிரோதமானது; வழக்கை திசை திருப்பும் நோக்கம் கொண்டது. இவ்வழக்கில் அவசர அவசரமாக பவானிசிங்கை அரசு வழக்கறிஞராக நியமித்து கடந்த செப்டம்பர் 29 ஆம் தேதி தமிழக அரசு ஆணை பிறப்பிப்பதற்கு முன்பாக கர்நாடக அரசுடன் ஆலோசனை நடத்தியிருக்க வேண்டும். ஆனால், இந்த வழக்கில் இல்லாத குழப்பமான சூழ்நிலையை தமிழக அரசு அதற்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு பவானிசிங்கை நியமித்தது மிகவும் துரதிருஷ்டவசமானது, என நீதிபதிகள் கூறியுள்ளனர்.
 
பவானிசிங்கின் நியமனம் செல்லாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதால், அவரை  சட்டவிரோதமாக நியமித்து நீதியை வளைக்க முயன்ற ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சர் பதவியில் நீடிக்கும் உரிமையை இழந்து விட்டார். எனவே, ஓ.பன்னீர்செல்வம் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.