1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 8 மார்ச் 2019 (15:33 IST)

மோடி எங்களுக்கு டாடி – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி புகழ்ச்சி !

ஜெயலலிதா இல்லாத கட்சிக்கு மோடிதான் டாடியாக செயலபட்டு வருகிறார் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக பாஜக கூட்டணி தமிழகத்தில் அமைந்துள்ள நிலையில் அந்தக் கூட்டணி கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது. ஜெயலலிதா இருந்த போது பாஜகவையும் அதன் தமிழக எதிர்ப்புக் கொள்கைகளையும் கடுமையாக எதிர்த்து வந்தார்.

2014 நாடாளு மன்றத் தேர்தலில் கூட மோடியா அல்லது இந்த லேடியா என முழக்கமிட்டு தமிழகத்தில் 37 எம்.பி.களை வெற்றி பெறச் செய்து இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரியக் கட்சி என்ற அந்தஸ்தைப் பெற்றுத் தந்தார். ஆனால் ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுக முழுவதும் பாஜக கட்டுப்பாட்டில் சென்று விட்டது. புகழ்பாடியேப் பழக்கப்பட்ட அதிமுக அமைச்சர்கள் ஜெயலலிதாவின் இடத்தில் மோடியை வைத்துப் புகழ்பாட ஆரம்பித்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார். அப்போது’ ஜெயலலிதா என்கிற அம்மா இல்லாத எங்களுக்கு பிரதமர் மோடிதான் தற்போது ‘டாடி’யாக இருந்து வழிநடத்துகிறார். அதிமுக ஆட்சியில் தமிழகம் பாதுகாப்பாக உள்ளது. அதேபோல், பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்திய அளவில் எல்லோரும் பாதுகாப்புடன் இருக்கிறார்கள்.

மேலும் ‘நாட்டை மோடியே மீண்டும் ஆள வேண்டும். அதேபோல், தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி தொடரவேண்டும்.’ எனவும் கூறியுள்ளார்.