1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: புதன், 20 செப்டம்பர் 2017 (19:07 IST)

எடப்பாடிக்கு எதிராக மற்றொரு எம்.எல்.ஏ - தினகரன் அணிக்கு மாறுவாரா?

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா இன்று தினகரனுக்கு ஆதரவாக பேட்டியளித்துள்ளார்.


 

 
தினகரன் பக்கம் சென்ற 18 எம்.எல்.ஏக்களை ஏற்கனவே சபாநாயகர் தகுதி நீக்கம் செய்துள்ளார்.  அது தொடர்பான வழக்கில், காலியாக உள்ள 18 தொகுதிகளில் தேர்தலை நடத்தகூடாது எனவும், மறு அறிவிப்பு வரும் வரை நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தக்கூடாது எனவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
இந்நிலையில், மதுரை வடக்கு சட்ட மன்ற தொகுதி எம்.எல்.ஏ.வான ராஜன் செல்லப்பா இன்று மாலை செய்தியாளிடம் பேசிய போது “ எனது தொகுதியில் பொது நிதி கொண்டு சாலை வசதி கூட செய்து கொடுக்கப்படவில்லை. அதேபோல், மதுரை மாநகராட்சி சாலைகளை சீரமைக்கவும் நிதி ஒதுக்கப்படவில்லை. இதுகுறித்து, முதல்வரிடம் மனு அளித்தும் எந்த பலனும் இல்லை” எனக் குற்றம் சாட்டினார்.
 
அதேபோல், 18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்தது தவறு எனக் கூறிய அவர், இது பேசித் தீர்த்திருக்க வேண்டிய விவகாரம், டிடிவி தினகனும், எடப்பாடி பழனிச்சாமியும் ஒன்றாக இணைய வேண்டும்” எனவும் அவர் தெரிவித்தார்.
 
தற்போது எடப்பாடி அணியில் இருக்கும் ராஜன் செல்லப்பா, அவருக்கு எதிராகவும், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கு ஆதரவாகவும் பேட்டியளித்திருப்பது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
மேலும், அவர் தினகரன் பக்கம் செல்வாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.