வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : ஞாயிறு, 19 மார்ச் 2017 (12:43 IST)

தொகுதிக்கு வந்த அதிமுக அமைச்சரை கேள்விகளால் துரத்திய பொதுமக்கள்!

தண்ணீர் பந்தல் திறக்க வந்த அமைச்சர் அன்பழகனை, ஒகேனக்கல் தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


 

தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் தண்ணீர் பந்தல் திறப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்து இருந்தது. தண்ணீர் பந்தல் திறப்பதற்காக தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அழைக்கப்பட்டு இருந்தார்.

விழாவில் கலந்து கொள்ள வந்த கே.பி.அன்பழகனை அங்கு திரண்ட பொதுமக்கள் முற்றுகையிட்டனர். தொடர்ந்த அடுக்கடுக்காக கேள்வி கேட்டு துளைத்து எடுத்தனர்.

“தொகுதி முழுக்க தண்ணீர் பிரச்சனை இருக்கிறது. அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் தண்ணீர் பந்தல் திறக்க வந்துள்ளீர்களா? பாலக்கோடு வார்டுகளில் தண்ணீர் வந்து ஒரு மாதம் ஆகின்றது, தொகுதி அமைச்சர் என்ற முறையில் உங்களிடம் முறையிட்டால் எந்த நடவடிக்கையும் இல்லை” என்று அடுக்கடுக்காக கேள்வி எழுப்பினர்.

மேலும், பொதுமக்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அமைச்சர் அன்பழகன், ஒகேனக்கல் குடிநீர் தடையின்றி வழங்க ஏற்பாடு செய்யப்படும் என உறுதி அளித்தார். தொடர்ந்து பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் உடனடியாக அங்கிருந்த திரும்பினார்.