செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: புதன், 14 ஜூன் 2017 (15:13 IST)

காஞ்சி சென்ற ஜனாதிபதி சங்கராச்சாரியாருக்கு பாத பூஜை செய்தாரா?

காஞ்சி சென்ற ஜனாதிபதி சங்கராச்சாரியாருக்கு பாத பூஜை செய்தாரா?

இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நேற்று காஞ்சிபுரத்துக்கு வருகைதந்திருந்தார். காஞ்சி வந்திருந்த அவர் சங்கர மடத்துக்கு சென்று சங்கராச்சாரியாரை சந்தித்து ஆசி பெற்று சென்றார்.


 
 
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடியப்போகும் வேளையில் அவர் காஞ்சிபுரத்துக்கு வருகை தந்திருப்பது அரசியல் நோக்கர்களால் உற்றுப்பார்க்கப்படுகிறது. அரக்கோணம் ராஜாளி விமானப் படைத்தளத்துக்கு வந்த குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, மாலை 3 மணியளவில் காஞ்சிபுரம் வந்தார்.
 
பலத்த பாதுகாப்புடன் பிரணாப் முகர்ஜி காஞ்சி காமாட்சியம்மன் கோயிலுக்கு சென்றார். அங்கு அவருக்கு நாதஸ்வர மேளத்துடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. காமாட்சியம்மனுக்கு வழிபாடு நடத்திவிட்டு பின்னர் அவர் காஞ்சி சங்கர மடத்துக்குச் சென்றார்.
 
அங்கே சங்கராச்சாரியாரை சந்தித்து ஆசி பெற்ற குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, சங்கராச்சாரியாருக்கு பாத பூஜை செய்ததாக தகவல்கள் வருகின்றன. இந்த பயணம் அரசு முறை பயணமாக இல்லாமல் பிரணாப் முகர்ஜியின் தனிப்பட்ட பயணமாக இது அறிவிக்கப்பட்டது.