1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 5 ஆகஸ்ட் 2018 (17:31 IST)

கருணாநிதி உடல்நிலை: மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்தார் ஜனாதிபதி

திமுக தலைவர் கருணாநிதி கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது உடல்நிலை குறித்து பல முக்கிய தலைவர்கள் சென்னைக்கு வருகை தந்து கேட்டறிந்தனர். அந்த வகையில் இன்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்கள் சென்னை காவேரி மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்
 
சென்னை வந்த ஜனாதிபதியை விமான நிலையத்தில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், சபாநாயகர் தனபால் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் வரவேற்றனர். அதன் பின்னர் காவேரி மருத்துவமனைக்கு வந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மு.க.ஸ்டாலின், கனிமொழி ஆகியோரை சந்தித்து திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து கேட்டறிந்தார். இந்த சந்திப்பின்போது கவர்னர் பன்வாரிலால், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் உடனிருந்தனர். 
 
சென்னை வருகை குறித்தும் கருணாநிதி உடல்நிலை குறித்தும் தனது டுவிட்டரில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறியதாவது: திரு கருணாநிதி அவர்களை சென்னையில் சந்தித்தேன். அவர்களின் குடும்பத்தார் மற்றும் மருத்துவரிடம் அவருடைய உடல்நலம் குறித்து கேட்டறிந்தேன். தமிழ்நாடு முன்னாள் முதல்வரும் முதுபெரும் தலைவருமான கலைஞர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்' என்று கூறியிருந்தார்