வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 21 ஜூலை 2019 (07:59 IST)

இன்னொரு விக்கெட் காலி! ஜீரோவாகும் டிடிவி தினகரன்

தினகரனின் அமமுகவில் இருந்த நிர்வாகிகளும் அவருக்கு மறைமுகமாக ஆதரவு கொடுத்து கொண்டிருந்த அதிமுக எம்எல்ஏக்களும் அவரிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகி வந்து கொண்டிருக்கும் நிலையில் இன்று மேலும் ஒரு எம்எல்ஏ தினகரன் ஆதரவை விலக்கிக் கொண்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு ஆதரவு கொடுத்துள்ளார் 
 
டிடிவி தினகரன் அவர்களுக்கு ஆதரவு கொடுத்துக் கொண்டிருந்த மூன்று எம்எல்ஏக்களில் ஒருவர் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு. இவர் நேற்று சென்னையில் தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து தனது ஆதரவை அதிமுகவுக்கு வழங்குவதாக அறிவித்துள்ளார்
 
விருத்தாச்சலம் எம்.எல்.ஏ கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு மற்றும் அறந்தாங்கி எம்.எல்.ஏ ரத்தினசபாபதி ஆகியோர் அதிமுக எம்எல்ஏக்கள் ஆக இருந்து வந்த நிலையில் மூவரும் தினகரனுக்கு ஆதரவளித்து வந்தனர். மூவரும் சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர் 
 
இந்த நிலையில் இம்மாத தொடக்கத்தில் கலைச்செல்வன், ரத்தினசபாபதி ஆகிய இரண்டு எம்.எல்.ஏக்கள் அதிமுகவுக்கு ஆதரவு அளித்த நிலையில் தற்போது எம்.எல்.ஏ பிரபுவும் ஆதரவு அளித்துள்ளதால் இவர்கள் மூவரும் இணைந்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை வாபஸ் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது
 
தினகரன் கட்சியில் இருந்து கிட்டத்தட்ட அனைவருமே வெளியேறிவிட்ட நிலையில் அவர் தற்போது தனிமையில் தவித்து வருவதாகவும், அவரது கட்சி கிட்டத்தட்ட ஜீரோவாகிவிட்டதாகவும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.