1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : வியாழன், 9 மார்ச் 2017 (17:13 IST)

அரசு மருத்துவமனையில் திடீர் மின்வெட்டு - 3 நோயாளிகள் மரணம்

அரசு மருத்துவமனையில் திடீரெனெ ஏற்பட்ட மின்வெட்டு காரணமாக 3 நோயாளிகள் மரணமடைந்த சம்பவம் புதுச்சேரியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
புதுச்சேரியில் உள்ள இந்திராகாந்தி அரசு மருத்துவமனையில் பொதுமக்களுக்கு இலவசமாக சிகிச்சையளிக்கப்படுகிறது. மருத்துவமனையின் 2வது மாடியில் சிறுநீரக பிரச்சனையில் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 
இந்நிலையில், இன்று காலை, அந்த பிரிவில் சில நோயாளிகளுக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அப்போது திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அதற்கு மாற்று ஏற்பாடாக செய்யப்பட்டுள்ள மின்சார சாதனமும் செயல்படவில்லை எனத்தெரிகிறது. இதனால், அங்கிருந்த டயாலிசிஸ் கருவிகள் இயங்கவில்லை. எனவே, சிகிச்சை பெற்று வந்தவர்கள் உயிருக்கு போராடினார்கள். எனவே, அவர்களை காப்பாற்ற மருத்துவர்கள் முயன்றனர். ஆனால், சுசிலா (75), அம்சா (55) மற்றும் கணேஷ் என மொத்தம் 3 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
 
இதுபற்றி கேள்விபட்டதும், அவர்களின் உறவினர்கள் மருத்துவமனையில் திரண்டனர். கோபத்தில் சிலர் மருத்துவமனை கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.  இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
இந்நிலையில், இறந்தவர்களின் குடும்பத்திற்கு புதுச்சேரி அரசு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்குவதாக அறிவித்துள்ளது. மேலும், சம்பந்தப்பட்ட பிரிவில் பணிபுரிந்த மருத்துவர், செவிலியர் மற்றும் தொழில் நுட்ப ஊழியர்கள் சிலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.