ஸ்டாலின் சட்டை பாக்கெட் கிழிப்பு; விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும்: பாஜக நக்கல்!
ஸ்டாலின் சட்டை பாக்கெட் கிழிப்பு; விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும்: பாஜக நக்கல்!
கடந்த சனிக்கிழமை தமிழக சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. இதில் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தது.
ஆனால் சபாநாயகர் இதனை ஏற்காததால் சட்டசபையில் கடும் அமளி ஏற்பட்டது. சபாநாயகர் இருக்கை, மைக் சேதப்படுத்தப்பட்டது. புத்தகங்கள் கிழிக்கப்பட்டன, கூச்சல் குழப்பம் ஏற்பட்டு சபை இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது.
இதனிடையே மு.க.ஸ்டாலின் உட்பட திமுக உறுப்பினர்கள் சபைக்காவலர்களால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். இதில் தனது சட்டை கிழிக்கப்பட்டது, தங்கள் கட்சி உறுப்பினர்கள் தாக்கப்பட்டார்கள் என பகிரங்கமாக ஊடகங்கள் முன்னால் தெரிவித்தார் மு.க.ஸ்டாலின்.
இது தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் சட்டசபைக் காவலர்களால் ஸ்டாலின் வெளியேற்றப்பட்ட பின்னர் அவரது சட்டை பாக்கெட் கிழியாமல், அதில் பேனா கூட இருந்ததற்கான புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. ஆனால் அதன் பின்னர் ஸ்டாலின் தனது சட்டை பாக்கெட்டை தானே கிழித்துவிட்டு சட்டசபையில் கிழிந்தது போல் நாடகமாடுகிறார் என ஆளும் தரப்பு குற்றம் சாட்டுகிறது.
இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜகவை சேர்ந்த மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், சட்டசபையில் ஸ்டாலின் சட்டை பாக்கெட்டை கிழித்தது யார் என்பது குறித்து தனி விசாரணை கமிஷன் வைக்க வேண்டும். அப்போது தான் உண்மை தெரியவரும் என நக்கலாக கூறியுள்ளார்.