வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: செவ்வாய், 26 செப்டம்பர் 2017 (16:13 IST)

மாடியிலிருந்து குதித்து கல்லூரி மாணவி தற்கொலை - விடுதி வார்டனுடன் பிரச்சனை?

விடுதி நிர்வாகத்துடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, பொறியியல் கல்லூரி மாணவி ஒருவர் கல்லூரியின் விடுதி மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
திண்டுக்கல் மாவட்டம் பழனி சாலையில் உள்ள பி.எஸ்.என்.ஏ தனியார் பொறியியல் கல்லூரியில் 2ம் வகுப்பு படிக்கும் மாணவி தாரணி. இவர் நேற்று இரவு அவரின் பெற்றோர்களுக்கு தொலைபேசியில் பேசும் போது, நிர்வாகத்தினர் தன்னை கொடுமைப்படுத்துவதாக கூறி அழுதுள்ளார். எனவே, அவரை காலையில் வந்து சந்திக்கிறோம் என பெற்றோர்கள் கூறியிருந்ததாக தெரிகிறது. 
 
இந்நிலையில், இன்று அதிகாலை அவர் கல்லூரி விடுதியின் மூன்றாவது மாடிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, ஆம்புலன்ஸ் வண்டி மூலம் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், செல்லும் வழியிலேயே மரணமடைந்து விட்டார் என கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளது.
 
ஆனால், எங்கள் மகள் நேற்று இரவு எங்களிடம் பேசினாள். அவளுக்கும், கல்லூரி வார்டனுக்கும் இடையே ஏதோ பிரச்சனை எனக் கூறினாள். உடனே நாங்கள் விடுதி நிர்வாகத்திடம் இதுபற்றி பேச அவர்களை தொடர்பு கொண்டோம். ஆனால், ஒருவரும் போனை எடுக்கவில்லை.
 
நிர்வாகத்துடனான பிரச்சனையில்தான் அவள் தற்கொலை செய்து கொண்டாள். அவள் மாடியிலிருந்து விழுந்த இடத்திலேயே இறந்துவிட்டாள். ஆனால், செல்லும் வழியில் இறந்துவிட்டதாக நிர்வாகம் கூறுகிறது. இதுபற்றி போலீசார் விசாரிக்க வேண்டும் என கண்ணீர் மல்க அவரின் பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.