வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 26 செப்டம்பர் 2018 (17:11 IST)

எழுவர் விடுதலைக்கு மீண்டும் தடை?

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 27 வருடங்களாக சிறையில் இருக்கும் ஏழு பேரையும் விடுவிக்கக் கூடாதென குண்டு வெடிப்பில் பலியானவர்களின் குடும்பத்தினர் ஆளுனரிடம் மனு அளித்துள்ளனர்.


1991 ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற மனித வெடிகுண்டு தாக்குதலில் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொல்லப்பட்டார். அந்த குண்டு வெடிப்பில் அவரோடு சேர்த்து காவல்துறை அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் என மொத்தம் 14 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக கைது செய்யப்பட்ட சாந்தன், முருகன், நளினி, பேரறிவாளன் ஆகிய ஏழுப் பேரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற தமிழக சட்டமன்றம் எடுத்த முடிவை உச்சநீதிமன்றம் ஏற்றது. இதையடுத்து அவர்கள் ஏழு பேரும் 27 ஆண்டுகளை சிறையில் வாழ்ந்துவிட்டதால் அவர்களை விடுதலை செய்ய வேண்டுமென தமிழகம் முழுவதிலும் இருந்து குரல்கள் எழுந்தன.

இதையடுத்து ஏழுபேரின் விடுதலை குறித்து மாநில அரசே முடிவெடுத்துக் கொள்ளலாம் அதில் மத்திய அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து எழுவர் விடுதலைக்கு தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும் பேரறிவாளின் தாயார் அற்புதம்மாளும் தனிப்பட்ட முறையில் ஆளுநரை சந்தித்து மனு ஒன்றை அளித்துள்ளார்.

தற்போது ஏழுபேரையும் விடுதலை செய்யக்கூடாது எனவும் அவர்கள் வாழ்நாள் முழுவதும் சிறையிலேயே கழிக்க வேண்டுமெனவும் குண்டுவெடிப்பில் பலியானோரின் குடும்பத்தினர் கருத்து தெரிவித்து உள்ளனர். இது சார்பாக மனு ஒன்றையும் ஆளுனரிடம் கொடுத்துள்ளனர்.