வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வியாழன், 9 மார்ச் 2017 (17:13 IST)

ஜெயலலிதாவை சசிகலா கும்பல் கொன்றதால் நமக்கு நல்ல வாய்ப்பு: மு.க.ஸ்டாலின்

மக்கள் முடிவெடுத்துவிட்டார்கள், ஜெயலலிதாவை கொன்றது சசிகலாவும், சசிகலா குடும்பம்தான் என்று. ஆக, அதை நாம் அப்படியே வைத்திருக்க வேண்டும். விட்டுவிடக் கூடாது. நல்ல வாய்ப்பு நமக்கு கிடைத்திருக்கிறது என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.


 

சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக மகளிர் அணி உலக மகளிர் தின விழாவில் நடைபெற்றது. இதில், திமுக செயல் தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.

கூட்டத்தில் பங்கேற்று பேசிய மு.க.ஸ்டாலின், “முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அவர்களுடன் அரசியலில் நமக்கு கருத்து வேறுபாடுகள், மாறுபாடுகள் இருக்கலாம், அவர்களின் கொள்கையில் நமக்கு உடன்பாடு இருக்க வாய்ப்பே கிடையாது.

ஆனால், முதலமைச்சராக இருந்து மறைந்திருக்கிறாரே, அது உண்மையான மரணமா?, இல்லை மர்மமான மரணமா? அந்த மரணத்துக்கு பின்னால் என்னென்ன இருக்கிறது? இன்றைக்கு தெளிவாக நம்மை விட, உங்களை விட, நம்முடைய கட்சியை விட, பொதுமக்கள் உறுதியாக இருக்கிறார்கள்.

மக்கள் முடிவெடுத்துவிட்டார்கள். ஜெயலலிதாவை கொன்றது சசிகலாதான், சசிகலா குடும்பம்தான், சசிகலா கும்பல்தான் என்று தெளிவாக இருக்கிறார்கள். ஆக, அதை நாம் அப்படியே வைத்திருக்க வேண்டும். விட்டுவிடக் கூடாது. நல்ல வாய்ப்பு நமக்கு கிடைத்திருக்கிறது.

இன்றைக்கு விஞ்ஞானம் வளர்ச்சி பெற்றிருக்கிற காரணத்தால் அதை நாம் பயன்படுத்த வேண்டும். ஆக, நீங்களும் இன்றைக்கு உங்களுடைய மகளிர் அணியின் நிர்வாகிகளோடு நீங்கள் தொடர்புகொள்ள, கட்சி அமைப்பின் நிர்வாகிகளோடு தொடர்புகொள்ள அதையும் சிறப்பான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று இந்த நேரத்தில் நான் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.