1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : திங்கள், 3 ஆகஸ்ட் 2015 (09:02 IST)

தமிழகத்தின் அனைத்து தரப்பு மக்களையும் நேரடியாக சந்திக்க ஜி.கே.வாசன் 100 நாட்கள் சுற்றுப்பயணம்

விவசாயிகள், மீனவர்கள், தொழிலாளர்கள் உள்பட அனைத்து தரப்பு மக்களையும் நேரடியாக சந்திக்கும் வகையில், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் 100 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
பெருந்தலைவர் காமராஜர் பொற்கால ஆட்சியை தமிழகத்தில் மீண்டும் கொண்டு வர அவர்கள் கடைப்பிடித்த நேர்மை, எளிமை, தூய்மையை பின்பற்றி மூப்பனாரின் வளமான தமிழகம், வலிமையான பாரதம் படைத்திடவும், வருகின்ற 2016 ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்கும் தொண்டர்களை ஊக்கப்படுத்தி, விவசாயிகள், மீனவர்கள், தொழிலாளர்கள் உள்பட அனைத்து தரப்பு மக்களையும் நேரடியாக சந்திக்கும் வகையில் எனது சுற்றுப்பயணம் அமைய இருக்கிறது.
 
எனவே, ஆகஸ்டு முதல் டிசம்பர் வரை 100 நாட்கள் தமிழகம் முழுவதும் உள்ள 32 வருவாய் மாவட்டங்களை உள்ளடக்கிய 120 சட்டமன்ற தொகுதிகளில் குறிப்பாக கிராமப்புறங்களில் மக்களை நேரில் சந்திக்கவும், இயக்கத்தை பலப்படுத்தவும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறேன்.
 
எனவே, வருகின்ற ஆகஸ்டு 3, 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் தூத்துக்குடி, ராமநாதபுரம், தேனி மாவட்டங்களுக்கு உள்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் சுற்றுப்பயணம் தொடங்குகிறது.
 
அதற்காக அந்தந்த மாவட்டத் தலைவர்கள் சிறப்பாக தங்கள் பணிகளை செய்து வருகிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.