1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 25 மே 2018 (14:30 IST)

தூத்துக்குடியில் மெல்ல திரும்பும் அமைதி.....

கடந்த 4 நாட்களாக கலவர பூமியாக இருந்த தூத்துக்குடியில் மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது.

 
கடந்த 22ம்தேதி தூத்துகுடியில் நடந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் போராட்டக்காரர்களை கலைக்க துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் 11 பேர் பலியாகிய நிலையில் நேற்று முன் தினம் இரண்டாவது நாளாக துப்பாக்கி சூடு நடந்தது.
 
இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 22 வயது இளைஞர் ஒருவர் பலியாகிய நிலையில் மேலும் ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சையின் பலனின்றி அவரும் இறந்ததால் கடந்த 3 நாட்களில் பலியானவர்களின் எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளது.  இந்த விவகாரம் நாடெங்கும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
 
இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் நேற்று முதல் வருகிற ஞாயிற்றுக்கிழமை வரை இணைய வசதிகள் துண்டிக்கப்பட்டுள்ளது.

 
இந்நிலையில், தூத்துக்குடியில் தற்போது அமைதி திரும்பி வருகிறது. தூத்துக்குடிக்கு புதிதாக நியமிக்கப்பட்ட கலெக்டர் தலைமையில் மக்கள் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது, ஸ்டெர்லைட் ஆலைய மூட வேண்டும் என்பது உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகள் வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட கலெக்டர் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு நடவடிக்கை எடுப்போம் என உறுதியளித்தார். 
 
இதையடுத்து, மெல்ல மெல்ல அங்கு இயல்பு நிலை திரும்பி வருகிறது. நான்கு நாட்களாக அடைக்கப்பட்டிருந்த கடைகள் இன்று திறக்கப்படும் எனவும், பேருந்துகள் இயக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.