வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Updated : செவ்வாய், 3 பிப்ரவரி 2015 (18:51 IST)

“காமாலைக் கண்ணுக்கு கண்டதெல்லாம் மஞ்சள்”: கருணாநிதி மீது ஓ.பி.எஸ். கடும் தாக்கு!

தமிழ்நாட்டில் பல்வேறு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழ்  அகதிகளை உடனடியாக இலங்கைக்குத் திருப்பி அனுப்பிவிட துடிக்கிறார் கருணாநிதி என தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போரின் காரணமாக புகலிடம் தேடி தமிழகம் வந்து பல ஆண்டுகளாக தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் இலங்கை தமிழ் அகதிகளை இலங்கைக்கு திருப்பி அனுப்புவது பற்றி விவாதிப்பதற்காக கடந்த 30.01.2015 அன்று தமிழக அரசின் உயர் அதிகாரியை அனுப்பி வைக்கும்படி தமிழக அரசுக்கு மத்திய அரசு அனுப்பிய கடிதத்திற்கு நான் பாரதப் பிரதமருக்கு 28.1.2015 அன்று ஒரு கடிதம் அனுப்பி இருந்தேன். மத்திய அரசு அனுப்பியிருந்த கடிதத்தில் இலங்கை தமிழ் அகதிகளின் விருப்பத்தின் அடிப்படையில் இலங்கைக்கு திருப்பி அனுப்புவது குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
 
இலங்கையிலிருந்து அகதிகளாக தமிழகத்திற்கு வந்த 3,04,269 பேரில் 2,12,000 பேர் அவர்களுடைய சொந்த விருப்பத்தின் பேரில் ஏற்கனவே திரும்பியுள்ளனர் என்பதை நான் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டி, எனவே சொந்த விருப்பத்தின் பேரில் இலங்கை திரும்புவோர் குறித்த கூட்டம்  என்பது இலங்கை தமிழ் அகதிகளை இலங்கைக்கு திரும்பிச் செல்ல ஊக்குவிக்கும் நடவடிக்கை தொடர்பான கூட்டம் என்றே பொருள் கொள்ளப்படும் என்பதை சுட்டிக்காட்டி, அகதிகள் இலங்கைக்கு திரும்புவதற்கு சுமூகமான நிலை இலங்கை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்னமும் ஏற்படவில்லை என்பதை தெரிவித்திருந்தேன்.
 
மேலும் இலங்கை அரசால் உறுதியான நம்பத்தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழ் அகதிகளுக்கு நிருபிக்கப்படக்கூடிய உறுதிமொழிகள் வழங்கப்பட்டு சொந்த இடங்களுக்கு திரும்பக்கூடிய நம்பிக்கை உருவாக்கப்பட்ட பின்னரே, இத்தகைய ஒரு கூட்டம் நடத்தப்படவேண்டும் என்று நான் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்திருந்தேன்.
 
மேலும் அடுத்த பக்கம்..

இந்தக் கூட்டத்தின் நோக்கம் பற்றியும், பிரதமருக்கு நான் எழுதிய கடிதம் பற்றியும் சரியாக புரிந்து கொள்ள இயலாத திமுக தலைவர் கருணாநிதி “அகதிகள் பிரச்சனையில் அதிமுக அரசின் பொறுப்பற்ற செயல்!” என்ற தலைப்பில் ஒரு வெற்று அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கை பல்வேறு முரண்பாடுகள் நிறைந்துள்ளதாக உள்ளது.
 
அறிக்கையின் தொடக்கத்திலேயே என்னை மற்றவர்கள் எவ்வாறு மதித்து வருகிறார்கள் என்று சம்பந்தமே இல்லாமல் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார் கருணாநிதி. இது “காமாலைக் கண்ணுக்கு கண்டதெல்லாம் மஞ்சள்” என்ற பழமொழியைத் தான் நினைவுபடுத்துகிறது. தற்போது திமுக தலைவர் கருணாநிதிக்கு அவரது கட்சிக்குள்ளேயே என்ன மதிப்பும், மரியாதையும் உள்ளது என்பதை தமிழகமே நன்கு அறியும். இதனால், மன உளைச்சலுக்குள்ளாகியுள்ள கருணாநிதி, மற்றவர்கள் மதிக்கப்படவில்லை என்று கூறிக்கொண்டு தனக்குத் தானே ஆறுதல் தேடிக்கொள்கிறார்.
 
அவரவர்க்கு உரிய மரியாதை அவரவர்க்கு கிடைக்கப் பெறும் என்பதை தந்தையும் தனயனும் புரிந்து கொள்ள வேண்டும்.
 
தனது அறிக்கையில் என்ன சொல்ல வருகிறோம் என்பது கருணாநிதிக்கு புரியாததால் அவர் தன்னையும் குழப்பிக் கொண்டு, பிறரையும் குழப்ப முற்பட்டுள்ளார் என்பது அவரது அறிக்கையிலிருந்து தெள்ளத் தெளிவாக தெரிகிறது. “இலங்கை அகதிகளும், இலங்கையிலே முன்னாள் அதிபர் ராஜபக்சே அரசின் கொடுமையினால் புலம் பெயர்ந்து வாழும் இலங்கைத் தமிழர்களும், தாங்கள் மீண்டும் தாயகம் திரும்பி, நிம்மதியாக வாழ வேண்டும் என்று விரும்புவது ஒரு புறம் இருந்தாலும், தற்போது அப்படி அங்கே சென்றால் அமைதியான வாழ்வுக்கான வழி ஏற்படுமா? அல்லது முன்பு போலவே கொடுமை தொடருமா? என்றே தெரியாத நிலையில்;  இலங்கைக்கு திரும்பினால் என்ன நடக்கும்? என்பது தெளிவற்ற தெரியாத நிலையில்……”  மத்திய அரசு இந்தக் கூட்டத்தை கூட்டியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
 
இவ்வாறு தெரிவித்துவிட்டு, ஆனாலும், மத்திய அரசு கூட்டிய அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளாதது அதிமுக அரசின் பொறுப்பற்ற செயல் என்று கூறுவது எத்தகைய இரட்டை வேடம். இங்கே உள்ள இலங்கை அகதிகளை உடனடியாக இலங்கைக்கு திருப்பி அனுப்பிவிட வேண்டும் என்று துடிக்கிறார் கருணாநிதி.
 
இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்கள் முதலில் தங்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அதன் பின்னரே, இங்கே உள்ள இலங்கை அகதிகளை திருப்பி அனுப்புவதற்கான கூட்டம் நடத்தப்படவேண்டும் என்பது தான் எங்களது நிலைப்பாடு.
 
தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்ற கருத்தை கருணாநிதி எப்பொழுது மாற்றிக் கொண்டார்? இலங்கை அகதிகளை கட்டாயப்படுத்தி திருப்பி அனுப்பிவிட வேண்டும் என்ற முடிவை எப்போது எடுத்தார்? என்பதை அவர் தான் விளக்க வேண்டும். இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் காரணமாக தமிழர்களுக்கு நன்மை  ஏற்படும் என்ற நம்பிக்கை இருந்தாலும், அந்த நம்பிக்கை செயல் வடிவம்  பெற வேண்டும். அதன் பின்னரே, இங்கேயுள்ள இலங்கை அகதிகள், தாயகம் திரும்புவது பற்றி எவரும் சிந்திக்க இயலும்"  என்று பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.