வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: சனி, 19 ஆகஸ்ட் 2017 (13:20 IST)

இன்னும் ஓரிரு நாளில் நல்ல முடிவு - ஓ.பி.எஸ் பேட்டி

அதிமுகவின் இரு அணிகளும் இணைவது பற்றி விரைவில் அறிவிப்பேன் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.


 

 
நேற்று முன்தினம் செய்தியாளர்கள் சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும் மற்றும் ஜெ. வாழ்ந்து வந்த போயஸ்கார்டன் வீடு நினைவிடமாக மாற்றப்படும் என இரு அறிவிப்புகளை அறிவித்தார்.    
 
எனவே, ஓ.பி.எஸ் அணியின் கோரிக்கைகள் அனைத்தையும் ஏறக்குறையை எடப்பாடி அணி நிறைவேற்றிவிட்டதால், எந்த நேரமும் இரு அணிகளும் இணையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஓ.பி.எஸ் தனது ஆதரவாளர்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். அதில், சிலர் அணிகளின் இணைப்பிற்கு எதிர்ப்பு தெரிவிப்பதால் இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை எனத் தெரிகிறது.
 
இந்நிலையில் தற்போது செய்தியாளர்களை அவர் சந்தித்த போது “இணைப்பு பற்றிய பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது. இன்னும் ஓரிரு நாளில் நல்ல முடிவு எட்டப்படும். அதுவரை பொறுத்திருங்கள். அதிமுகவில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. பொதுமக்கள் மற்றும் தொண்டர்களின் விருப்பத்திற்கு இணங்க முடிவுகள் எடுக்கப்படும்” என அவர் தெரிவித்தார்.
 
இரு அணிகளின் இணைப்பு பற்றி இன்று அவர் செய்தியாளர்களிடம் அவர் அறிவிப்பார் எனக் காத்திருந்த அதிமுக தொண்டர்கள் இதனால் ஏமாற்றம் அடைந்தனர்.